ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் சுப்மன் கில்லை இறக்குவதற்கு பதிலாக சூர்யகுமார் யாதவை இறக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர் வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 2004-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாத ஆஸ்திரேலியா, இம்முறை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து தொடரை வெல்ல முனைப்பு காட்டி வருகின்றது. இச்சூழலில்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகினார்.
ஏற்கனவே இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் இல்லாதது பெரிய பின்னடைவாக கருதப்பட்ட நிலையில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயரும் விலகியிருப்பது இந்திய அணிக்கு அடிமேல் அடியாக உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற சுழல் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் ஒரு வீரர் வெளியேறியுள்ளது இந்திய அணிக்கு பெரும் சறுக்கலாக பார்க்கப்படுகிறது.
எனவே முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்று வீரராக யார் களமிறங்குவார் என்கிற குழப்பம் நீடித்துவரும் நிலையில், பலரும் சுப்மன் கில்லை பரிந்துரைத்து வருகின்றனர். தனது கடைசி 12 போட்டிகளில் ஒரு இரட்டை சதம் உள்பட 4 சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் விளாசியுள்ளார் அவர். சுப்மன் கில் மிடில்-ஆர்டரில் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு சிறந்த மாற்று வீரராக அவர் இருப்பார் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கின் தேர்வு வேறுவிதமாக இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் சுப்மன் கில்லை இறக்குவதற்கு பதிலாக சூர்யகுமார் யாதவை இறக்கலாம் என தினேஷ் கார்த்திக் யோசனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தினேஷ் கார்த்திக் பேட்டி ஒன்றில் கூறுகையில், “ஸ்ரேயாஸ் ஐயர் இடத்துக்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் இடையே போட்டி நிலவும். எனது தனிப்பட்ட கருத்துப்படி , சூர்யகுமாரை விளையாட வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் அவர் ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளரும் கூட. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழல்பந்து வீச்சு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய சூழலில் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கொடுப்பது சரியானதாக இருக்கும். அவர் தற்போது அருமையான ஃபார்மில் இருக்கிறார்” என்று கூறினார்.
இந்திய டி20 அணியின் நட்சத்திர வீரராக விளங்கி வரும் சூரியகுமார் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராக இடம்பிடித்துள்ளார். டி20 போட்டிகளில் ‘கிங்’ஆக வலம் வரும் சூர்யகுமார், டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்தால் ஆஸ்திரேலியாவின் லியானின் ‘சுழலை’ துணிச்சலாக எதிர்கொள்ளலாம் என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.