சமீப காலமாக, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களுடையே இருந்து வருகிறது. பட்ஜெட் வெளியான நிலையில், தங்கத்தின் விலை ஏறுமா? இறங்குமா? என்பது பலரின் கேள்வியாக இருந்தது.
கடந்த ஜனவரி 29, 30 தேதிகளில் தங்கத்தின் விலையில் எந்தவொரு மாறுபாடும் இல்லாத நிலையில், இறக்குமதி வரி குறைப்பு இருக்கும் என்ற கருத்து இருந்து வந்ததால் ஜனவரி 31-ம் தேதி தங்கத்தின் விலை சற்று குறைந்தது.
இந்நிலையில் நேற்று தனது பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன், “நடப்பு நிதியாண்டில், தங்கம் மற்றும் தங்க கட்டிகளின் சுங்க வரி அதிகரிக்கப்பட்டது. தற்போது தங்க நகை மற்றும் தங்கத்தால் ஆன பொருட்களின் வரியும் அதிகரிக்கப்படுகிறது. மேலும் வெள்ளி, வெள்ளி கட்டிகள் மற்றும் வெள்ளியால் ஆன பொருட்களுக்கும் இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது” என்று கூறினார். இதன் தாக்கம் உடனடியாகவே தங்கம் விலையில் தெரிந்தது.
நேற்று காலை, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 ஆகவும், பவுனுக்கு ரூ. 176 ஆகவும் உயர்ந்தது. நேற்று மாலை ஒரு கிராம் தங்கம் ரூ.77-ஆக உயர்ந்து ரூ.5,415 ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.616-ஆக உயர்ந்து ரூ. 43,320 ஆகவும் விற்பனை ஆனது.
தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.60 ஆக உயர்ந்து ரூ.5,475-ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.480-ஆக உயர்ந்து ரூ.43,800-ஆக உயர்ந்து விற்பனை ஆகி வருகிறது. மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உலக அளவில் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சி மந்தநிலையில் இருக்கும் என்பதால் தங்கம் விலை இனி குறைவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது என்று நிபுணர்கள் கூறுவது குறிபிடத்தக்கது.