சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.

இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.

இப்படியும் நடந்ததா?

கிரீஸ் நாட்டில் நடைபெற்றது அந்த தீ மிதி சடங்கு. ஆய்வு நோக்கத்தோடு அங்கு வந்திருந்தார்கள் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள். தீ மிதியில் கலந்து கொண்டவர்களின் தலையிலும் பாதங்களிலும் சில கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.

தீ மிதி சடங்கு

நெருப்புப் பாதையில் 15 நிமிடங்களுக்குப் போவதும் வருவதுமாக இருந்தனர் அந்த தீமிதியாளர்கள். அவர்கள் எந்த வலியையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவர்களின் குதிகால் 356 டிகிரி வெப்பத்தைக் காட்டியது. இந்த அளவு வெப்பத்தில் பாதங்கள் பொரிந்திருக்க வேண்டுமே! அப்போது இந்த வியப்புகளுக்கான விடைகள் அந்த விஞ்ஞானிகளுக்குக் கிடைக்கவில்லை. என்றாலும் பிற்காலத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் கிட்டத்தட்ட வெற்றிகரமான ஒரு விளக்கத்தை அளித்தன.

ஒரு திரவத்தைத் திடீரென்று எக்கச்சக்கமான வெப்பத்துக்கு உள்ளாக்கினால் அது தனக்கு மேலே ஒரு நீராவிப் படலத்தை உண்டாக்கிக் கொள்ளும். இந்த உண்மையை முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டு விஞ்ஞானி லெய்டன் ப்ராஸ்ட்.

இந்தக் கண்டுபிடிப்புக்கும் தீமிதிக்கும் தொடர்பு உண்டு. தீமிதியின் போது பாதத்தில் வியர்க்கிறது. இந்த வியர்வை மனதில் உண்டாகும் திகில் உணர்வாலும் இருக்கலாம். நெருப்பில் உண்டாகும் வெப்பத்தாலும் இருக்கலாம். இந்த வியர்வை நீராவியாக மாறி கொஞ்ச நேரத்துக்கு நெருப்பிலிருந்து பாதங்களைப் பாதுகாக்கிறது.

நெருப்பு

வலியை உணராது இருக்க சில நுட்பங்களை தீ மிதிப்பவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றார் மெக்கார்த்தி என்ற மனோதத்துவ நிபுணர். குறிப்பிட்ட விதத்தில் மூச்சுவிடுவது கூட இப்படி ஒரு நுட்பம்தானாம். தவிர பெரும்பாலும் நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில்தான் தீ மிதி திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. வழக்கமாகத் தூங்கும் நேரம் என்றால் அப்போது மூளையின் செயல்பாடு கொஞ்சம் மந்தமாகத்தான் இருக்கும். அதாவது வலியைக் குறைவாக உணர்வார்கள்.

லெய்கினட் என்ற இயற்பியல் விஞ்ஞானி, “பெரும்பாலும் தீமிதியில் கொட்டி வைக்கப்படும் கரித்துண்டுகள் மிகவும் லேசானவை. அவை உள்ளே வெற்றிடம் கொண்டதாகவும் இருக்கும். இவற்றின் வெப்பநிலை மிக அதிகமாக இருந்தாலும் அவை கடத்தும் வெப்பத்தின் அளவு குறைவாகவே இருக்கும்” என்றார்.

ஆனால் எரியும் கரித்துண்டுகளின்மீது நடக்கும் சிலரது பாதங்கள் எந்தவித சேதமும் அடையாமல் இருக்க வேறு சிலரது பாதங்கள் மட்டும் கொப்பளித்துப் போவானேன்? “இதை அவர் அவருடைய உடல்நிலை மற்றும் மனநிலையைப் பொறுத்து விஷயம்” என்று பொதுவாகக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

தீ மிதிப்பு

மூளையில் தோன்றும் அலைகளை நான்கு நிலைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, ஆல்பா நிலை. விழித்திருக்கும் போதே கண்களுக்கு ஓய்வு கொடுக்கும் விதத்தில் அவற்றை மூடிக்கொண்டால் மூளையில் உண்டாகும் நிலை இது. பீட்டா நிலை என்பது ஒருவர் மிகத்தீவிரமாக ஒரு விஷயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது உண்டாகக்கூடிய அலை. மெல்லிய உறக்கத்தில் இருக்கும்போது தீட்டா அலைகள் உருவாகின்றன. ஆழ்ந்த உறக்கத்தில் உருவாவது டெல்டா அலை.

விழித்துக் கொண்டிருக்கும்போதே நமது மூளையில் தீட்டா மற்றும் டெல்டா அலைகளை உருவாக்குமாறு செய்யும் வித்தை நமக்குத் தெரிந்துவிட்டால் நம் பாதத்தில் ஏற்படும் வலியை மூளைக்கு எட்ட விடாமல் செய்து விடலாம் என்கிறார்கள். தீமிதியில் கலந்து கொள்ளும் அத்தனை பேருக்கும் இந்த உத்தி தெரியுமா? அறிவியல் அடிப்படை விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது என்றாலும் ஐயங்கள் தொடர்கின்றன.

– மர்ம சரித்திரம் தொடரும்…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.