74-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன. மாநிலங்களில் குடியரசு தின விழாவில் ஆளுநர்கள் கொடியேற்றுவது வழக்கம். அதன்படி தெலங்கானாவில் அந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றன. முன்னதாக ஹைதராபாத்திலுள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய ஆளுநர், அதன்பிறகு ராஜ் பவனிலுள்ள தர்பார் அரங்கில் தேசியக்கொடியை ஏற்றினார்.

மேலும், இது தொடர்பாக ஆளுநர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், “நம் இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தெலங்கானாவில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினேன்” எனப் பதிவிட்டிருக்கிறார். ஆனால், இந்த நிகழ்வில், தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருக்கிறார். தெலங்கானா மாநிலத்தில் பி.ஆர்.எஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில முதலமைச்சருக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

சமீபத்தில் பிரதமர் மோடி, தெலங்கானா சென்றபோது, அவரை வரவேற்காமல் சந்திரசேகர ராவ் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக மத்திய அரசையும், அதன் செயல்பாடுகளையும் அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில்தான் ஆளுநர் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வில் அவர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.