இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரராக ஐசிசி அறிவித்துள்ளது.
இந்திய அணியின் 360° வீரர் என அழைக்கப்படுகிறார், சூர்யகுமார் யாதவ். ஐபிஎல், டி20 போட்டிகளில் இவருடைய சரவெடி பேட்டிங்கைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்த சூர்யகுமார் யாதவ், தன்னுடைய 3வது சதத்தைப் பதிவு செய்தார். ராஜ்கோட்டில் கடந்த ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டியில்தான் 7 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் உதவியுடன் இந்த சதத்தை எடுத்தார். அப்போட்டியில் இலங்கை அணி எப்படி பந்து வீசினாலும் நொறுக்கி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 51 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார்.
இப்படி டி20யில் வெளுத்துக் கட்டும் அவர், கடந்த ஆண்டில் 31 போட்டிகளில் விளையாடி 46.56 சராசரி மற்றும் 187.43 ஸ்ட்ரைக் ரேட்டில் 1,164 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன் 1000 ரன்களை எடுத்தது இதுவே முதல் முறை. மேலும், கடந்த ஆண்டில் யாதவ் 68 சிக்ஸர்களை விளாசியிருந்தார். 2 சதங்கள் மற்றும் 9 அரை சதங்களை அடித்துள்ளார்.
இதையடுத்தே, கடந்த ஆண்டுக்கான டி20 போட்டியின் சிறந்த வீரராக ஐசிசி அறிவித்துள்ளது. இதுவரை 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், 18 இன்னிங்ஸ்களில் 433 ரன்களை எடுத்துள்ளார். அதில் இரண்டு அரை சதங்களும் அடங்கும். அதேநேரத்தில் 45 டி20 போட்டிகளில் பங்கேற்றிருக்கும் யாதவ், 1578 ரன்களை எடுத்துள்ளார். அதில் 3 சதங்களும், 13 அரை சதங்களும் அடக்கம்.