தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வண்ண வண்ண உடையணிந்து வாஞ்சையுடன் வரும் மாணவிகள் பொங்கல் விழாவை கலர்ஃபுல்லாக கொண்டாடி வருகின்றனர்.

image

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் பொங்கல் விழா கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி கலைக் கல்லூரியில் பயிலும் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் சமத்துவ பொங்கலிட்டு கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

image

இதையடுத்து மாணவிகள் பாரம்பரிய முறைப்படி கும்மியடித்தும் குலவையிட்டும் நூற்றுக்கணக்கான மாணவிகள் ஒரே நேரத்தில் நடனமாடியும் சில மாணவிகள் சிலம்பம் சுற்றியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நிகழ்வு காண்பவரே கவர்ந்தது.

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஸ்ரீ ரமணாஸ் மகளிர் கலைக் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவிகள் பாரம்பரிய உடையான சேலை அணிந்து ஆட்டம் பாட்டம் கொண்டாடத்துடன் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

image

இந்த நிகழ்ச்சியில், கல்லூரி மாணவிகள் பொங்கல் வைத்து குலவை எழுப்பி பொங்கல் பானையை சுற்றி கும்மி அடித்து பொங்கலோ பொங்கல் என பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். மேலும் பல்வேறு பாடல்களுக்கு ஆடி பாடி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து பொங்கல் பானைக்கு பூஜை செய்து இயற்கைக்கும் விவசாயத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் பொங்கல் திருநாளையொட்டி சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு முதல்வர் அப்துல் காதிர் தலைமை வகித்தார். மாணவர்களுடன் இணைந்து பேராசிரியர்கள் சமத்துவ பொங்கலிட்டனர். அப்போது முதல்வர் களைந்து வைத்திருந்த பச்சரிசியை பொங்கல் பானையில் இட்டார். இதையடுத்து மாணவ மாணவிகள் குலவையிட்டும், கரவொலி எழுப்பியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

image

இதைத்தொடர்ந்து கல்லூரி முதல்வர் அப்துல் காதர் பேசுகையில், கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தோடு தங்களுடைய எதிர்காலத்தை அமைப்போம் என்ற உறுதி மொழியை இந்த சமத்துவ பொங்கல் விழாவின் மூலம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உடைகளான ஆண்கள் வேட்டி சட்டையிலும், பெண்கள் சேலை அணிந்தும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

image

கல்லூரி வளாகத்தில் துறை வாரியாக மாணவிகள் வண்ண வண்ண கோலமிட்டு பொங்கல் வைத்து குலவையிட்டு தனது சக தோழிகளுடன் உற்சாகமாக கொண்டாடினர். இதையடுத்து கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும் விதமாக மாட்டு வண்டிகள், ஜல்லிக்கட்டு மாடுகள், ஆட்டுக் கிடாய், சேவல் உள்ளிட்டவைகள் வைத்து பொங்கல் விழா கொண்டாடாடப்பட்டது.

அரியலூர்:

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய மாணவ மாணவிகள் ஒற்றுமையை வளர்க்கும் விதமாக நண்பர்களுடன் பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கிராம புறங்களில் இருந்து வரும் மாணவிகள் மற்றும் நகர் புற மாணவிகளுக்கு பொங்கல் பண்டிகையை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளும் படி சூரிய பொங்கல் வைத்தனர்.

image

இதனையடுத்து கோலப் போட்டிகள், கயிறு இழுத்தல், பானை உடைத்தல் மற்றும் எலுமிச்சை பழத்தை ஸ்பூனில் வைத்து ஓடி விளையாடினர். இதில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கொரோனா காலத்திற்குப் பிறகு இது போன்று ஒரே கலரில் புடவைகள் அணிந்ததில் மகிழ்ச்சியடைவதாகவும் மாணவிகள் கூறினர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் கலைக் கல்லூரியில் பொங்கல் விழா தமிழர்களின் பாரம்பரிய சேலை அணிந்து மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மாணவிகள் அனைவரும் உற்சாகத்துடன் சமத்துவ பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

image

பொங்கல் விழாவில் கல்லூரி மாணவிகள் கட்டைக்கால் கரகம், கரகாட்டம், கும்மியாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் என பல்வேறு தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடினர், இது பார்ப்போர் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்தது கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.