உத்தரப்பிரதேசத்தில் அடுத்த மாதம் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்பாடு செய்துள்ளார். இதையடுத்து முதலீட்டாளர்களை சந்தித்து பேசுவதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் இரண்டு நாள் பயணமாக மும்பை வந்திருந்தார்.
அவர் முதல் நாள் மும்பையில் வசிக்கும் உத்தரப்பிரதேச தொழிலதிபர்களை சந்தித்துப்பேசினார். இரண்டாவது நாளில் மும்பை தொழிலதிபர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களை சந்தித்துபேசினார்.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் சுனில் ஷெட்டி, பாலிவுட் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்று அடிக்கடி சோசியல் மீடியாவில் அழைப்பு விடுக்கப்படும் பிரச்னைக்கு தீர்வு காணும்படி கேட்டுக்கொண்டார்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் டாடா, அதானி, கோத்ரேஜ், பிர்லா, பிரமல், வேதாந்தா, பார்லே, ஹிந்துஜா, லோதா, ராம்கி நிறுவன பிரதிதிகள் யோகி ஆதித்யநாத்தை தனியாக சந்தித்து பேசினர்.
கரண் அதானி உத்தரப்பிரதேசத்தில் சேமிப்பு கிடங்கு அமைப்பது குறித்தும், 7 இடங்களில் சிமெண்ட் தொழிற்சாலை அமைப்பது குறித்து யோகி ஆதித்யநாத்துடன் கலந்து ஆலோசித்தார். அதோடு லக்னோ விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான செயல்திட்டத்தையும் யோகியிடம் கரண் அதானி தாக்கல் செய்தார்.
குமாரமங்களம் பிர்லா உத்தரப்பிரதேசத்தில் சர்வதேச தரத்தில் கன்வென்சர் சென்டர் அமைப்பது குறித்தும், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைப்பது குறித்தும் ஆலோசித்தார். இதைத்தொடர்ந்து நேற்று மாலையே யோகி ஆதித்யநாத் லக்னோ புறப்பட்டுச்சென்றார்.
மும்பை பயணம் குறித்து உத்தரப்பிரதேச அரசு சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “மும்பை தொழிலதிபர்கள் உத்தரப்பிரதேசத்தில் 5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளனர். தொழிலதிபர் முகேஷ் அம்பானி உத்தரப்பிரதேசம் முழுக்க 5 தொழில்நுட்ப கட்டமைப்பு வசதியை ஏற்படுத்திக்கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதன் மூலம் கிராமப்பகுதியில் சுகாதார வசதி மேம்படுத்தப்படும். கவுதம் அதானி நிறுவனம் அரசுடன் இணைந்து நொய்டாவில் மருத்துவக்கல்லூரி ஒன்றை அமைப்பதாகவும், திறன் மேம்பாட்டுப்பயிற்சி மையம் ஒன்றை அமைத்து அதில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுக்கவும் சம்மதித்து இருக்கிறார். டிசம்பர் மாதத்தில் உத்தரப்பிரதேச அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் 16 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து முதலீட்டாளர்களை சந்தித்து உத்தரப்பிரதேசத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.