பண்ட் குடித்திருந்தாலோ இல்லை அதிவேகமாக வந்திருந்தாலோ எப்படி 200கிமீ தொலைவிற்கு விபத்தின்றி அவரால் காரை ஓட்டிவந்திருக்க முடியும் என்று கூறியிருக்கும் போலீசார், வேக கேமராக்களை ஆய்வு செய்தபோது அவர் இயல்பாகதான் காரை இயக்கி வந்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை ரூர்க்கி அருகே பண்ட் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் காயங்களுடன் தப்பிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப், டெஹ்ராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் பண்ட் கார் விபத்து குறித்து பேசியிருக்கும் உத்தரகாண்ட் போலீஸார், அவர் அதிவேகமாக வாகனம் ஓட்டவில்லை என்றும், போதையிலும் வண்டியை இயக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், கிரிக்கெட் வீரர் ஓட்டிச் சென்ற கார், அவரது சொந்த ஊரான ரூர்க்கி அருகே, டிவைடரில் மோதிய பிறகு தான், வேகமாக தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து ஹரித்வாரின் சீனியர் எஸ்பி, அஜய் சிங் கூறுகையில், ”உத்தரபிரதேச எல்லையில் இருந்து நர்சனில் விபத்து நடந்த இடம் வரை எட்டு முதல் 10 வேக கேமராக்களை நாங்கள் சோதனை செய்துள்ளோம். கிரிக்கெட் வீரரின் கார் அந்த தேசிய நெடுஞ்சாலையில் மணிக்கு 80 கிமீ வேக வரம்பை கடக்கவில்லை. டிவைடரில் மோதி காற்றில் தூக்கி வீசப்பட்டதால் கார் அதிவேகத்தில் சென்றது சிசிடிவி காட்சிகளில் தெரிகிறது. எங்கள் தொழில்நுட்பக் குழுவினரும் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். கிரிக்கெட் வீரர் அதிவேகமாகச் செல்வதைக் குறிக்கும் எதையும் நாங்கள் அந்த இடத்தில் கண்டுபிடிக்கவில்லை. அவர் குடிபோதையில் இருந்திருந்தால், டெல்லியில் இருந்து 200 கிலோமீட்டர் தூரம் எந்த விபத்தையும் சந்திக்காமல் எப்படி வந்திருப்பார். ரூர்க்கி மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளித்த மருத்துவர் அவர் முற்றிலும் இயல்பாகத்தான் இருந்ததாக கூறினார். அதனால்தான் அவரால் வெற்றிகரமாக காரில் இருந்து வெளியேற முடிந்தது. குடிபோதையில் இருந்தால் எவரும் காரை விட்டு இறங்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு போலீசார் கூறுகையில்,”ரிஷப் பண்ட் காரை இயக்கும்போது உறங்கிவிட்டதால் தான் விபத்து நிகழ்ந்திருப்பதாக தெரிவித்துள்ளார்”. விபத்து குறித்து முன்னர் பேசியிருந்த ரிஷப் பண்ட், இது எப்படி நடந்தது என்று தனக்கு நினைவில்லை என்று காவல்துறைக்கு அளித்த ஆரம்ப அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் இயக்குனர் ஷியாம் சர்மா, பண்டை இன்று மருத்துவமனையில் சந்தித்தார். சந்தித்த பிறகு அவர் நிருபர்களிடம் பேசுகையில், ”பண்ட் நலமுடன் உள்ளார். இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுடன் பிசிசிஐ மருத்துவர்கள் தொடர்பில் உள்ளனர். தொடர் சிறந்த சிகிச்சைக்காக அவர் எங்கு வேண்டுமானாலும் மாற்றப்பட வேண்டுமா என்பதை பிசிசிஐ முடிவு எடுக்கும். விபத்து எப்படி நடந்தது எனபது பற்றி ரிஷப் பண்ட் பேசியதாகவும், பள்ளத்தைத் தவிர்க்க முயற்சித்த போது தான் விபத்து ஏற்பட்டதாகவும்” தெரிவித்ததாக கூறியுள்ளார்.