மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க தொண்டர்கள் அவரின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
குடும்ப ஆட்சியை ஒழித்து…
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, உறுதிமொழி வாசிக்கப்பட்டது. அதில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், ஜெயலளிதா ஆகியோரை புகழந்தும், அவர்களின் ஆட்சியை மீண்டும் மக்களுக்கு அளிக்க வேண்டும் எனவும், குடும்ப ஆட்சியை ஒழித்து, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் எனவும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க-வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
அ.தி.மு.க-வை தன் வசமாக நினைக்கும் துரோகிகளை வீழ்த்துவோம்…
அதைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரின் ஆதரவு அணியினர் வந்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் , ஜே சி டி பிரபாகர், புகழேந்தி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு அங்கு உள்ள மேடையில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அதில், “அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்க வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். தி.மு.க-வை ஆட்சி கட்டிலில் இருந்து இறக்க வேண்டும். மேலும் தொண்டர்கள் இயக்கமான அ.தி.மு.க-வை தன் வசமாக நினைக்கும் துரோகிகளை வீழ்த்துவோம். சட்டவிரோத பொதுக்குழு மூலம் குறுக்கு வழியில் அ.தி.மு.க-வை அபகரிக்க முயற்சிப்போரையும் வீழ்த்துவோம்” என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.
சசிகலாவை தலைமை தாங்க வைக்க…
இதற்கு பிறகு எம்.ஜி.ஆர் நினைவிடம் வந்த சசிகலா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு உறுதிமொழி ஏற்றனர். அதில், அ.தி.மு.க-வுக்கு சசிகலாவை தலைமை தாங்க வைக்கவும், தி.மு.க-வை வென்று அ.தி.மு.க ஆட்சி அமைத்து மக்கள் பணி செய்திட உறுதிமொழி வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “எனக்கும் அ.தி.மு.க-வுக்கும் சம்பந்தம் இல்லையா என்று தொண்டர்களிடம் கேள்வி கேட்டால் சரியான பதில் கிடைக்கும். தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று தனிப்பட்ட நபர் ஒரு கம்பெனி நடத்துவது போல் சொல்ல முடியாது.
அதனால் அ.தி.மு.க-வில் தொண்டர்களின் முடிவு தான் முக்கியமானது. அ.தி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆர் அப்படிதான் கட்சி உருவாக்கியுள்ளார். அ.தி.மு.க-வை பொறுத்தவரை தொண்டர்களின் எண்ணம் எதுவோ அதுதான் வெற்றி பெறும் தொண்டர்களின் முடிவுபடி தான் நடக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.