ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றுவரும் பாரத் ஜோடோ யாத்திரை, கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. கேரளா, கர்நாடகா, தெலங்கானா உட்பட பல மாநிலங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தான், ஹரியானா மாநிலத்தித்தை கடந்து இன்று டெல்லியில் நுழைந்திருக்கிறது. இந்த யாத்திரையில், கட்சிக்கு அப்பால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்வதாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் மத்திய அரசு, கொரோனா விதிகளை பின்பற்றி யாத்திரை மேற்கொள்ளுமாறும் இல்லாவிட்டால் யாத்திரையை ஒத்திவைக்குமாறும் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியிருந்தது. எனினும் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படும். ஆனால் யாத்திரை ரத்து செய்யப்படாது என காங்கிரஸ் அறிவித்தது.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்,” சீனா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தை பற்றி மட்டுமே கவலைப்படுகிறது. இது கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டிய காலம்.
யாத்திரையில் பங்கேற்ற இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவரை சந்தித்த ராகுல் காந்தியோ, மற்ற காங்கிரஸ் தலைவர்களோ கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்களா? அல்லது தங்களை தனிமைப்படுத்திக் கொண்டார்களா? இந்த யாத்திரை ஊழல்வாதிகளை ஒன்று சேர்ப்பதற்கான யாத்திரை. காங்கிரஸ் கட்சியினர் ஒரு குடும்பத்தின் நலனை மட்டுமே சிந்திப்பதற்கு பதில், நாட்டின் நலன் குறித்து சிந்திக்க வேண்டும்.” என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், ” அனுராக் தாக்கூர் அப்படி பேசியதில் ஆச்சரியம் இல்லை. பாரத் ஜோடோ யாத்திரைக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்திருக்கிறது. ஏராளமான மக்கள் இதில் இணைந்திருக்கிறார்கள். ஆனால் அனுராக் தாக்கூர் அவ்வாறு கூறியிருக்கிறார் என்றால், அவர் பெரிய அமைச்சர், நாங்கள் சிறிய மனிதர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.