நடிகர் ஷாருக்கானின் ‘பதான்’ படம் அடுத்த மாதம் 25ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான ‘Besharaam Rang’ சமீபத்தில் வெளியானது. அதில் காவி நிற பிகினி உடையுடன் தீபிகா படுகோன் வருவது குறித்து இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ‘பதான்’ படத்தைத் தடை செய்வோம் என்று மத்தியப் பிரதேச அரசு நேரடியாக எச்சரிக்கை செய்திருக்கிறது. ஆனால், ஷாருக்கான் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
இதனிடையே சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த 28வது சர்வதேச திரைப்பட விழாவில் ஷாருக்கான் கலந்து கொண்டு பேசுகையில், ‘பதான்’ பட விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்திருக்கிறார். சோசியல் மீடியாவில் பரவும் விஷத்தன்மை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை ரத்து செய்தல் (Cancel Culture) தொடர்பாக அவர் உரையாற்றினார்.
“சோசியல் மீடியா பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட குறுகிய கண்ணோட்டத்தினால் மட்டுமே பார்க்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் எதிர்மறை சோசியல் மீடியா பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் வர்த்தக மதிப்பும் அதிகரிக்கிறது.
இத்தகைய கூட்டு முயற்சி ஒட்டுமொத்தமாகப் பிரிவினை மற்றும் அழிவுக்கு வழிவகுக்கிறது. மக்களின் வாழ்க்கையை எளிய முறையில் கதைகளாகச் சொல்லி மனிதன் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறான் என்பதை சினிமா அம்பலப்படுத்துகிறது. எங்களால் சிறிது நேரம்கூட சந்தித்துப் பேச முடியவில்லை.
கொரோனா தாக்கம் முடிந்து உலகம் இப்போது பழைய நிலைக்குத் திரும்பி வருகிறது. நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உலகம் என்ன செய்தாலும், நானும், நீங்களும் மற்றும் உலகில் உள்ள அனைத்து நேர்மையான மனிதர்களும் உயிருடன் இருக்கிறோம் என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. சினிமா மூலம் எதிர்கால சந்ததிக்கு புதிய உலகத்தை உருவாக்க நாம் அனைவரும் இணைவோம்” என்றார்.
இவ்விழாவில் நடிகர் அமிதாப்பச்சனும் கலந்து கொண்டார். அவர் மோடி அரசு மத்தியில் அதிகாரத்திற்கு வந்த பிறகு அரசியல் குறித்து எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். ஆனால் இத்திரைப்பட விழாவில் பேசிய அமிதாப்பச்சன், “இப்போது மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்புவதை மேடையில் இருக்கும் எனது சகாக்கள் ஏற்றுக்கொள்வார்கள்” என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார். அதோடு ஷாருக்கானின் மேடைப் பேச்சுக்கு அமிதாப்பச்சனே பாராட்டும் தெரிவித்தார்.