இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 331 ரன்களுடன் ஆடி வருகிறது இந்திய அணி.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடுகிறது. நேற்று தொடங்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில், புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான பேட்டிங்கால் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்தது இந்திய அணி.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விரைவாகவே கேப்டன் ராகுல், கில், கோலி மூன்று பேரின் விக்கெட்டையும் பறிகொடுத்து 48 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் தடுமாறியது. பின்னர் கைக்கோர்த்த புஜாரா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய பண்ட், 6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசி 46 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய பார்ட்னர்ஷிப் போட்டது. 149 ரன்கள் எடுத்த இந்த கூட்டணியை புஜாரா 90 ரன்கள் இருந்த நிலையில் பிரித்தார், வங்கதேச அணியின் டைஜுல் இஸ்லாம். முதல் நாளின் இறுதி பந்தில் அக்சர் பட்டேலும் அவுட்டாக முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்தது இந்திய அணி.
பந்து ஸ்டம்பில் பட்டும் தப்பித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
84ஆவது ஓவரில் எபதாத் ஹொசைன் வீசிய 5ஆவது டெலிவரி லோ இன்ஸிவிங்காகி ஆஃப் ஸ்டம்பில் பட்டு போனது. பந்து ஸ்டம்பில் அடித்தும் பெய்ல் கீழே விழாமல் இருந்தது. பந்து ஸ்டம்பில் பட்டு அவுட் என கத்திக்கொண்டு வந்த எபதாத் ஹொசைன், பெய்ல் கீழே விழாதது கண்டு அதிர்ச்சியானார். அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களில் களத்தில் இருந்தார். முதல் நாள் முடிவில் இந்தியா வங்கதேச போட்டியில் நிகழ்ந்த இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.
ஏன் ஸ்ரேயாஸ் ஐயர் அவுட்டென அறிவிக்கப்படவில்லை!
கிரிக்கெட் சட்ட விதிமுறைகளில் சட்டம் 29.1ன் படி, ஒரு பேட்ஸ்மேனிற்க்கு அவுட் கொடுக்கப்படவேண்டும் என்றால் பெயில் முழுவதுமாக வெளியேற்றப்பட்டால் மட்டுமே வெளியேற்ற முடியும். அதாவது ஸ்டம்புகளின் மேற்புறத்தில் இருந்து குறைந்தபட்சம் ஒரு பெயிலாவது முழுவதுமாக அகற்றப்பட வேண்டும். மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்டம்புகள் தரையில் இருந்து அகற்றப்படும்போது தான் விக்கெட் விழுந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தியாவிற்கு முக்கியமான போட்டியாக பார்க்கப்படும் வங்கதேச போட்டிகள்!
இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. இந்தியா விளையாடிய 12 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 4ஆவது இடத்தில் உள்ளது. வங்கதேசம் 10 போட்டிகளில் 8 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்திய அணி இந்த 2 போட்டிகளிலும் வெற்றிப்பெற்றால் மட்டும் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிபின் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.
இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 86 ரன்களுக்கு எபாதத் ஹொசைன் பந்துவீச்சில் போல்டாகி வெளியேற, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் ஆடிவருகின்றனர். 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் சேர்த்துள்ளது இந்திய அணி.