கல்யாண் கர்நாடகா:

பீதர், யாதகிரி, ராய்ச்சூர், கொப்பல், கலபுரகி, பல்லாரி ஆகிய 6 மாவட்டங்கள் ‘ஐதராபாத்-கர்நாடக’ என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் ‘கல்யாண் கர்நாடக’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த பகுதி நிஜாம்களின் ஆளுகையின் கீழ் இருந்தது. பல்வேறு காரணங்களினால் மக்களின் கிளர்ச்சி வெடித்தது. இதையடுத்து நிஜாம்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இருப்பினும் இந்த பகுதியில் பெரும்பாலான இடங்கள் பின்தங்கியதாகவே இருக்கிறது.

குறிப்பாக போதுமான அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகள், மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவை இல்லை என்று பலரும் குற்றச்சாட்டி வருகின்றனர். மல்லிகார்ஜுன கார்கே போன்ற உயர்மட்டத் தலைவர்கள் மாநில அரசியலில் முக்கிய பங்காற்றிய போதிலும், அதை உயர்த்துவதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற கருத்தும் அந்த மாநிலத்தில் நிலவி வருகிறது.

நிகழ்ச்சியில் கார்கேவுடன் முக்கிய தலைவர்கள்

காங்கிரஸின் 10 அம்ச திட்டங்கள்:

இதையடுத்து இங்கிருக்கும் மக்களின் வாக்குகளை பெறும் வகையில் அரசியல் கட்சிகள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, “பிதார்-பல்லாரி நான்கு வழிச்சாலை, எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையாக மாற்றப்படும்.

ராய்ச்சூர் மற்றும் பல்லாரியில் விமான நிலையங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் உதவியுடன் யாத்கிரை, ராய்ச்சூர் மற்றும் கலபுர்கி பகுதியை உள்ளடக்கிய சுற்றுச் சாலை அமைக்க முன்மொழியப்பட்டிருக்கிறது” என்றார். இந்நிலையில் “கல்யாண் கர்நாடகா பகுதியின் மேம்பாட்டிற்காக மாற்றம், முன்னேற்றம், வளர்ச்சி என்ற தலைப்பில் 10 அம்ச திட்டங்களை” காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது.

ரூ.5,000 கோடி ஒதுக்கீடு:

அதாவது அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவி ஏற்ற பின்பு கார்கே கடந்த டிசம்பர் 10-ம் தேதி தனது சொந்த ஊரான கலபுரகிக்கு வருகை தந்தார். அவருக்குக் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கார்கே, “கல்யாண் கர்நாடகா பிராந்தியத்தின் அனைத்து வளர்ச்சிக்கும் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது.

குவித்த தொண்டர்கள்

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மக்களின், குறிப்பாக இப்பகுதி இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். கல்யாண் கர்நாடகா பகுதியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.5,000 கோடியை ஒதுக்குவதாகக் காங்கிரஸ் கட்சி உறுதியளிக்கிறது. ஆட்சிக்கு வந்த 12 மாதங்களில் காலியாக இருக்கும் அனைத்து அரசுப் பணியிடங்களையும் நிரப்பப்படும்.

10 முக்கிய திட்டங்கள்

1 லட்சம் வேலைவாய்ப்புகள்:

கல்யாண் கர்நாடகா பகுதிக்கு என்று பிரத்யேக தொழில்துறை கொள்கை உருவாக்கப்படும். இதன் மூலம் தனியார் துறையில் ஐந்து ஆண்டுகளில் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப்படும். கிருஷ்ணா படுகை மற்றும் கோதாவரி படுகையில் முழுமையடையாத அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்களையும் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் 24 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும்.

துங்கபத்திரை நீர்த்தேக்கத்தின் தூர்வாருதல் போன்ற அனைத்து புதிய சாத்தியமான நீர்ப்பாசன திட்டங்களும் சிறப்புத் தொகுப்பாக எடுத்துக்கொள்ளப்படும். வேகமான இணைப்பு மற்றும் இயக்கத்தை எளிதாக்கும் வகையில், கல்யாண் கர்நாடகா பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைமையகங்களிலிருந்து பெங்களூருவில் உள்ள மாநிலத் தலைமையகத்திற்கும் 4-வழிச்சாலை இணைப்பு வழங்கப்படும்.

10 முக்கிய திட்டங்கள்

IIT, IIM அமைப்பு:

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM) அமைக்கப்படும். 41 சட்டமன்றத் தொகுதியிலும் 100 ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரிகள் அமைக்கப்படும். மகளிர் பட்டப்படிப்பு கல்லூரி அமைப்பதைக் கட்சி உறுதி செய்யும். புகழ்பெற்ற தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும், கல்யாண கர்நாடகா பகுதியில் போதிய மானியங்கள் மற்றும் அரசு ஆதரவுடன் கல்வி, தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்லூரிகளை அமைப்பதற்கும் புதிய `சிறப்புக் கல்வி மண்டலக் கொள்கையை’ காங்கிரஸ் கட்சி வெளியிடும்.

கல்யாண் கர்நாடகா பிராந்தியத்தில் உள்ள 41 சட்டமன்றத் தொகுதிகளில் ஒவ்வொரு பகுதியிலும் ‘குழந்தை இறப்பு விகிதம்’ மற்றும் ‘ஊட்டச்சத்துக் குறைபாடு’ போன்ற எழும் பிரச்னைகளைத் தீர்க்க காங்கிரஸ் கட்சி `தாய் மற்றும் குழந்தை சிறப்பு மருத்துவமனை’ அமைக்க உறுதியளிக்கிறது. அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) அமைக்கப்படும்.

ராகுல் காந்தி | காங்கிரஸ்

குடும்பத்திற்கு ஒரு வீடு:

ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதற்கு ஒரு முன்னிபந்தனையாக கல்யாண் கர்நாடகா பிராந்தியத்தில் “ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு” என்ற கனவு நிறைவேற்றப்படும். கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக “ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி ரூபாய்” ஒதுக்குவதாகக் காங்கிரஸ் கட்சி உறுதியளிக்கிறது” என்றார். இவ்வாறு இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளைத் தட்டி விட்டிருக்கிறார்கள். தேர்தல் முடிவு வெளியான பிறகு எந்த கட்சி ஆட்சியில் அமர்கிறது. என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.