மத்திய பிரதேசத்தின் போபாலில் கடந்த இரண்டு தினங்களில் (சனி மற்றும் ஞாயிறு நாட்களில்) சுமார் 9,000 பேர் மீது குற்றமிழைத்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுவாக சினிமாக்களில்தான் ஒரேநேரத்தில் பல நூறு ரவுடிகளை ஒரே இரவில் காவல்துறையினர் கைது செய்வார்கள். ஹீரோயிஸமாக பார்க்கப்படும் அதுபோன்ற காட்சிகள், நிஜ வாழ்க்கையில் நடக்குமா என்று பார்த்தால், இதுவரை நாம் எங்குமே அப்படியொன்றை பார்த்திருக்க முடியாது என்போம். ஆனால் அப்படியொரு ஹீரோயிச சாகச காட்சியைதான் தற்போது நிகழ்த்தியிருக்கிறது மத்திய பிரதேச காவல்துறை.
தலைமறைவான குற்றவாளிகளை கைது செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், மத்திய பிரதேசத்தில் சுமார் 17,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு (combing patrolling) சுமார் 9,000 பேர் கடந்த இரண்டு தினங்களில் (சனி – ஞாயிறு) கைது செய்யப்பட்டுள்ளனர் என ம.பி காவல்துறை தெரிவித்திருக்கிறது. இதை செய்வதன் மூலம் மாநிலத்தில் பாதுகாப்பு, அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியும் என்றுகூறி, நிலுவையிலிருந்த நிரந்தர மற்றும் கைது வாரண்ட்களை அடிப்படையாக வைத்து அதிலிருந்தவர்களை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். இதன்கீழ் குற்றவாளிகளை சோதனை செய்ய ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அதிகாரபூர்வ சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்திருக்கிறது.
பல்வேறு மண்டலங்களின் கூடுதல் டைரக்டர் ஜெனரல்கள், துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் பிற அதிகாரிகளின் கூட்டு முயற்சியால் இந்த 9,000 குற்றவாளிகளை கைது செய்யப்பட்டுள்ளனர் என சொல்லப்படுகிறது. இருப்பினும் பிடிபட்டவர்களில் சிலர் தப்பி ஓடிவிட்டனர் என சொல்லப்படுகிறது.
இவர்களில் சுமார் 6,000 குற்றவாளிகளுக்கு எதிராக கைது வாரண்ட் நிலுவையில் உள்ளது. மேலும் 2,600 பேர் மீது நிரந்தர வாரண்டுகள், சுமார் 100 பேர் காணாமல் போனவர்கள் மற்றும் 200 பேர் `கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டிருந்த பட்டியலின்கீழ் வருபவர்கள் என சொல்லப்படுகிறது. இவர்கள் மட்டுமன்றி குற்றப்பிண்ணனி கொண்டிருந்த 1,000 பேரும் கண்காணிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மத்திய பிரதேச போலீஸின் காவல் கண்காணிப்பாளர் சூரஜ் குமார் வர்மா தலைமையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்துள்ளன.
தகவல் உதவி: PTI