உச்சநீதிமன்ற நீதிபதியாக தீபங்கர் தத்தா பதவியேற்றார். இவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
1965 ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்பதாம் தேதி பிறந்த தீபங்கர் தத்தா, கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சலில் குமார் தத்தாவின் மகன் ஆவார் இவருடைய உறவினர் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அமித்தவராய் ஆவார்.
கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வந்த தீபங்கர் தத்தா, கடந்த 2020ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அந்த சமயத்தில் கொரோனா உச்ச நிலையில் இருந்த போதும் சுமார் 2,000 கிலோ மீட்டர் தூரத்தை காரிலேயே பயணம் செய்து மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்க கடந்த செப்டம்பர் மாதம் கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்த நிலையில் சுமார் இரண்டரை மாத காலதாமதத்திற்கு பிறகு மத்திய அரசு அதற்கு ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் இவருக்கு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவரது பதவியேற்புடன் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஆறு நீதிபதிகள் இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.