கத்தார் கால்பந்து திருவிழாவில் நேற்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் பிரேசில், போர்ச்சுகல் அணிகள் அடுத்த சுற்று போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் கத்தார் கால்பந்து தொடரில் நேற்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் G பிரிவில் இடம்பெற்றுள்ள கேமரூன் – செர்பியா அணிகள் மோதின. இதில், முதல்பாதி ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் கேமரூன் வீரர் காஸ்ட்லெட்டோ தனது அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். இதையடுத்து ஆட்டத்தின் 45+1-வது நிமிடத்தில் செர்பியா வீரர் பாவ்லோவிக் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

image

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 45+3-வது நிமிடத்தில் செர்பியா வீரர் மிலின்கோவிக் சாவிக் ஒருகோல் அடித்து தனது அணியை முன்னிலை படுத்தினார். இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் அதே அணி வீரர் மைட்ரோவிக் ஒருகோல் அடித்தார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் கேமரூன் வீரர்கள் அபூபக்கர் ஒரு கோலும், 66-வது நிமிடத்தில் சௌப்போ மோட்டிங் ஒரு கோலும் அடித்தார். இதன் மூலம் கேமரூன் செர்பியா இடையேயான ஆட்டம் 3:3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இதையடுத்து மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு போட்டியில் H பிரிவில் இடம்பெற்றுள்ள கானா – தென் கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் கானா வீரர் சலீசு ஒரு கோலும், ஆட்டத்தில் 34 மற்றும் 68-வது நிமிடங்களில் அதே அணி வீரர் குடுஸ் இரண்டு கோல்களும் அடித்தார். அதேபோல் ஆட்டத்தின் 58 மற்றும் 61-வது நிமிடங்களில் தென் கொரியா வீரர் சோ இரண்டு கோல்களை அடித்தார். இதன் மூலம் கானா அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

image

இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் G பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில் அணி சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொண்டது. பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்ற இந்த போட்டியின் முதல்பாதி கோலின்றி சமனில் முடிந்த நிலையில், இரண்டாவது பாதி ஆட்டதின் 83-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் கேஸ்மிரோ ஒருகோல் அடித்து தனது அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இறுதியில் பிரேசில் அணி 1:0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணியை வென்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பிரேசில் அணி அடுத்த சுற்று போட்டிக்கு தகுதிபெற்றது.

image

இதையடுத்து நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் H பிரிவில் இடம்பெற்றுள்ள போர்ச்சுகல் உருகுவே அணிகள் களம்கண்டன. இந்த போட்டியின் முதல்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்தின் 54 மற்றும் 90+8-வது நிமிடங்களில் போர்ச்சுகல் வீரர் பெர்மாண்டஸ் இரண்டு கோல்களை அடித்தார். இதன் மூலம் போர்ச்சுகல் அணி 2:0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வென்று அடுத்த சுற்று போட்டிக்கு தகுதிபெற்றது.

இதுவரை பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல் ஆகிய மூன்று அணிகளும் அடுத்த சுற்று போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.