ராஜஸ்தானில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டிற்கும், சச்சின் பைலட்டிற்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. காங்கிரஸ் தலைமை சச்சின் பைலட்டிற்கு முதல்வர் பதவி கொடுக்க விரும்புகிறது. ஆனால் அப்படி முதல்வர் பதவி கொடுத்தால் ஒட்டுமொத்தமாக பதவியை ராஜினாமா செய்வோம் என்று அசோக் கெலாட் ஆதரவாளர்கள் மிரட்டிக்கொண்டிருக்கின்றனர். இதனால் அவசரப்பட்டு எந்தவித முடிவையும் எடுக்க முடியாத நிலையில் காங்கிரஸ் தலைமை இருக்கிறது. அடிக்கடி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிப்பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கடந்த 2020-ம் ஆண்டு சச்சின் பைலட் 19 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவில் சேர முயன்றார். ஆனால் அந்த முயற்சியை காங்கிரஸ் தடுத்து நிறுத்திவிட்டது. குஜராத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்திருந்த அசோக் கெலாட் அளித்த பேட்டியில் இதனை குறிப்பிட்டார். சச்சின் பைலட்டை துரோகி என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “நாட்டிலேயே மாநில கட்சி தலைவர் ஒருவர் சொந்த அரசையே கவிழ்க்க முயன்றார் என்றால் அது ராஜஸ்தானில்தான் நடந்ததாக இருக்கும். வெறும் 10 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கூட இல்லாத ஒருவரை எப்படி கட்சி தலைமை முதல்வராக்கும். சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்தவர்.
துரோகி எப்படி முதல்வராக முடியும். சச்சின் பைலட் டெல்லியில் அமித் ஷா மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அவருக்கு(சச்சின்) ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏ.க்களில் சிலர் 5 கோடியும், சிலர் 10 கோடியும் பெற்றனர். இந்த பணம் பாஜக அலுவலகத்தில் இருந்து வந்தது” என்று தெரிவித்தார். அசோக் கெலாட்டின் இக்கருத்தை பாஜக மறுத்துள்ளது. “காங்கிரஸ் தனது கட்சியினரை கட்டுக்குள் வைத்திருக்க தவறிவிட்டது. காங்கிரஸ் கட்சி ராஜஸ்தானை இழந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் அசோக் கெலாட் விரக்தியில் இவ்வாறு பேசுகிறார். தனது தோல்விக்கு அசோக் கெலாட் பாஜகவை குறை கூறுகிறார்” என ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
அசோக் கெலாட்டின் கருத்து குறித்து சச்சின் பைலட் அளித்துள்ள பேட்டியில், “யாரும் இப்படி பதவிபோய்விடும் என்ற அச்சத்தில் இருக்ககூடாது. இன்று பதவி இருக்கும். நாளை இருக்காது. இதுதான் அரசியல். அசோக் கெலாட்டின் கருத்து எனக்கு எதிராக இருப்பதை காண்கிறேன். அனுபவம் மிக்கவர். மூத்த தலைவர். முற்றிலும் பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது அனுபவமுள்ள தலைவருக்கு தகுதியில்லாதது. நாம் அனைவரும் இணைந்து பாஜகவை எதிர்த்து போராடும் போது இது போன்ற குற்றச்சாட்டுகள் எந்த பலனையும் அளிக்கப்போவதில்லை. இது போன்ற குற்றச்சாட்டுக்களை இதற்கு முன்பும் என் மீது சுமத்தி இருக்கிறார்.
ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரையை நாம் அனைவரும் இணைந்து வெற்றி பெறச்செய்யவேண்டும். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜக-வை எதிர்த்து நிற்க முடியும். நான் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த போது பாஜக மிகவும் மோசமாக தோல்வியடைந்தது. மீண்டும் தேர்தலில் எப்படி வெற்றி பெறவேண்டும் என்பதற்குத்தான் நாம் இப்போது முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்” என்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட அசோக் கெலாட் திட்டமிட்டார். உடனே சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்வராக்க காங்கிரஸ் திட்டமிட்டது. இதனால் சுதாரித்துக்கொண்ட அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தனக்கு தேவையில்லை என்றும், முதல்வர் பதவிதான் வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.