பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்ல உறவை விரும்புவதாகவும், ஆனால் பாஜக ஆட்சியில் இருக்கும் போது இது நடக்க வாய்ப்பில்லை என்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியிருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் நிலவிய பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனால் மீண்டும் பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார். இதனை தொடர்ந்து, மீண்டும் பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற வேண்டும் என பல பேரணிகளை இம்ரான் கான் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இம்ரான் கான் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘’இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு இருப்பது இரு நாடுகளுக்கும் மிகப் பெரிய அளவில் உதவும். இது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் பாஜக அரசாங்கம் தேசியவாத நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். அவர்கள் தேசியவாத உணர்வுகளைத் தூண்டிவிடுவதால் இது வாய்ப்பில்லை.
மேலும், காஷ்மீர் பிரச்சனை ஒரு தடை இருக்கலாம். ஆனால் நாங்கள் சொல்வது காஷ்மீர் பிரச்சினைக்கான தீர்வுக்கான வரைபடத்தை பாஜக வைத்திருக்க வேண்டும் என்பதுதான். பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில் இஸ்லாமாபாத்துடன் இயல்பான அண்டை நாடுகளின் உறவுகளை விரும்புவதாக இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் கூறியுள்ளது. காஷ்மீர் விவகாரம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5, 2019 அன்று, ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, அரசியலமைப்பின் 370 வது பிரிவை இந்தியா ரத்து செய்தது. இந்தியாவின் இந்த முடிவைத் தொடர்ந்து, பாகிஸ்தான் புது டெல்லியுடனான தூதரக உறவுகளை குறைத்து கொண்டது. அன்றிலிருந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் பெரும்பாலும் முடக்கப்பட்டுள்ளன.
எங்களுக்கு உண்மையில் இரு நாடுகளுடனும் ஒரு உறவு தேவை. கடந்த காலங்களில் நடந்த சுமூகமின்மையை போல மற்றொரு சூழ்நிலை தொடர நான் விரும்பவில்லை. மேலும், பாகிஸ்தானில் இருக்கும் 120 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து எப்படி மீட்டெடுப்பது என்பதில் தான் என் அக்கறை உள்ளது. அதை செய்வதற்கான வழி, நாம் அனைத்து நாடுகளுடன் நல்ல உறவு வைத்து, வர்த்தம் செய்ய முடிந்தால் மட்டுமே நாட்டுக்கு உதவ முடியும்.’’ என்றார்.
மேலும், ’நான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆப்கானிஸ்தான், ஈரான், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பாகிஸ்தானின் அனைத்து அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்த முயல்வேன்’ என்றும் கூறினார்.