வெயிலில் விளையாடிக் களைத்து ஓடி வரும் சிறுவர்களை ஆசுவாசப்படுத்த, தண்ணீரோடு பாக்கெட் ரஸ்னாவை கலந்து, கூடவே ஜில்லென்று இருக்க ஐஸ்கட்டிகளை போட்டுக் கொடுத்தால் போதும், `சொர்க்கமே என்றாலும் அது ரஸ்னாவை போல வருமா’ என்பது போல இருக்கும்.
ஒரு 5 ரூபாய் பாக்கெட் ரஸ்னா இருந்தாலே, 32 கிளாஸ் ரஸ்னாவை தயாரித்து விடலாம் என்ற விளம்பரங்களைப் பார்த்து தங்கள் வீடுகளில் ரஸ்னாக்களை வாங்கி சுவைக்காதவர்கள் இல்லை. குளிர்ச்சியாக உள்ளே இறங்கும் ரஸ்னாவின் புளிப்பும், இனிப்பும் கலந்த சுவை நம்மை உச்சு கொட்ட வைத்து விடும். பல குளிர்பானங்கள் வருவதும் போவதுமாக இருந்தாலும், இன்றும் சிறுவயது நினைவுகளோடு வந்து ஒட்டிக் கொண்டு விடும் ரஸ்னா.
இந்நிலையில், ரஸ்னாவின் நிறுவனர் அரீஸ் கம்பட்டா (Areez Khambatta) தன்னுடைய 85வது வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார். நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு இருந்தவர், அகமதாபாத்தில் நவம்பர் 19 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
1970 – களில் எளிய மக்களும் வாங்கி பயனுறும் வகையில், அதிக விலை குளிர்பானங்களுக்கு மாற்றாக ரஸ்னா அறிமுகமானது. 9 உற்பத்தி நிலையங்கள், இந்தியா முழுதும் விநியோகிக்க சிறந்த 26 டிப்போக்கள் என நாட்டின் 1.8 மில்லியன் சில்லறை விற்பனை நிலையங்களில் ரஸ்னா விற்கப்பட்டது.
விலை மலிவாக இருந்தாலும், அதன் சுவை மற்றும் தரத்திற்காக ரஸ்னா, பல மதிப்பு மிக்க விருதுகளைப் பெற்றுள்ளது.
இவரின் இறப்பைக் குறித்து ரஸ்னா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஸ்னா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும், அரீஸ் கம்பட்டா பெனவலண்ட் டிரஸ்ட்டின் தலைவருமான அரீஸ் கம்பட்டா, 2022 நவம்பர் 19- ஆம் தேதி காலமானார் என்பதை ஆழந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சமூக சேவையின் மூலம் இந்தியத் தொழில், வணிகம் மற்றும் மிக முக்கியமாக சமூக வளர்ச்சிக்கு அரீஸ் கம்பட்டா பெரும் பங்களிப்பை அளித்துள்ளார்’’ எனத் தெரிவித்துள்ளது.