முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது உச்ச நீதிமன்றத்தால் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஆறு பேர்களை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இதனால் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலான சிறை வாழ்க்கையை முடித்துக்கொண்டு, தற்போது வெளியில் வந்திருக்கிறார்கள். இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூகவலைதளங்களில் கடந்த சில தினங்களாக இதுகுறித்த பதிவுகள்தான் அதிகம் தென்பட்டன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில், இதுகுறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில், “ராஜீவ் காந்தி கொலையாளிகள் உச்ச நீதிமன்றத்தால் நீண்டகாலம் தண்டனை அனுபவித்ததன் அடிப்படையில், விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்த கொடிய குற்றத்தில் இருந்து விடுவிக்கப்படவில்லை. அந்த மனித வெடிகுண்டு ராஜீவ் காந்தியை மட்டுமல்ல, பல தமிழர்களையும் பலிகொண்டு விட்டது. குண்டுவெடிப்பில் தங்கள் உயிருக்குயிரானவர்களை பலிகொடுத்த குடும்பங்கள் இன்னும் ஆறாத காயத்தோடு இதே தமிழ்மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். கொலையாளிகளைக் கொண்டாடுவது மாபெரும் தவறு. மன்னிக்க முடியாத குற்றம். காந்தியைக் கொன்ற கோட்சேவைக் கொண்டாடுகிற ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவிற்கும், இன்று ராஜீவ் காந்தி கொலையாளிகளைக் கொண்டாடுபவர்களுக்கும் என்ன வேறுபாடு?. கருணை அடிப்படையில் குற்றவாளிகள் மன்னிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், குற்றவாளிகளைக் கொண்டாடுவது அநாகரிகமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட” என்று குறிப்பிட்டுள்ளார்.