இறுதிப் போட்டியில் எந்த அணி வந்தாலும் வீழ்த்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரையில் பாகிஸ்தான் அணி 13 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. கடைசியாக அந்த அணி 2009-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு நுழைந்து சாம்பியன் பட்டமும் வென்றிருந்தது. அதற்குமுன், 2007ல் நடந்த முதல் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் வெற்றியை இழந்தது.
இதனிடையே டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதப்போவது இந்திய அணியா அல்லது இங்கிலாந்து அணியா என்பது இன்று தெரியவரும். இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா மோத வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகா்களின் எதிா்பாா்ப்பாக இருக்கிறது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மோதுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமிடம், இறுதிப்போட்டியில் உங்களுடன் மோதுவது இந்தியாவாக இருந்தால் அந்த அழுத்தத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பாபர் அசாம், ”இறுதிப்போட்டியில் எந்த அணியுடன் மோதப் போகிறோம் என்பதை இப்போதே சொல்ல முடியாது. எந்த அணி வந்தாலும் அதை வெல்ல 100 சதவீதம் முயற்சிப்போம். நாங்கள் எப்போதும் சவால்களை சமாளிக்க முயற்சி செய்கிறோம். இறுதிப் போட்டியில் அழுத்தம் இருப்பது இயல்பான ஒன்றுதான். ஒரு தொடரில் பல்வேறு கட்டங்களைக் கடந்து இறுதிப் போட்டிக்குள் நுழைகிறோம். அப்படி இறுதிப் போட்டிக்கு வரும்போது அச்சமில்லாமல் விளையாட முயற்சிப்பது அவசியமானதாகிறது. கடந்த 3-4 போட்டிகளில் எப்படி விளையாடினோமோ அதேபோன்றுதான் இறுதிப்போட்டியிலும் விளையாட விரும்புகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே: இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதப்போவது யார்..? இந்தியா-இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை