இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நாளை ஆஸ்திரேலியாவின் அடில்லெய்ட் ஓவரில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இரு அணிகளின் நிலையும், கடந்து வந்த பாதையையும் பார்க்கலாம்.

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 இல் இங்கிலாந்து 7 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் அடிப்படையில் 2ஆம் இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. ரன் ரேட் தான் அனைத்துக்கும் அடிப்படை என்பதால், ஆஸ்திரேலிய அணியால் அரையிறுதிக்கு தகுதிப்பெற முடியாமல் போனது. இக்காரணத்தினாலேயே குரூப் 2 இல் 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த இந்தியா எளிதாக அரையிறுதிக்கு முன்னேறியது. சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் விளையாடிய இந்தியா, தென் ஆப்பிரிக்காவுட போட்டியில் மட்டுமே தோல்வியடைந்தது. இதர 4 அணிகளுடன் கெத்தாக வெற்றிப்பெற்றது.

image

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடைசியாக நடைபெற்ற 5 டி20 போட்டிகளில் 4 இல் இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது. அதனால் அண்மை காலங்களில் டி20 போட்டிகளில் இந்திய அணியே சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. இந்தத் தொடரில் இந்தியாவின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. கே.எல். ராகுல் – ரோகித் சர்மா கூட்டணி போதிய அளவிலான ரன்களை சேர்க்கவில்லை. ஆனால் கடைசி சில ஆட்டங்களில் கே.எல்.ராகுல் ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். ரோகித் சர்மா இதுவரை ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருக்கிறார். அரையிறுதியில் ஹிட் மேன் விஸ்வரூபம் எடுத்தால் அணிக்கு கூடுதல் பலம். இந்தத் தொடர் முழுவதும் அணிக்கு நங்கூரம் போல இருப்பது விராட் கோலியும் சூர்யகுமார் யாதவ்வும்தான்.

இந்த இருவரும் டி20 உலகக் கோப்பையில் பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசும்போது கூட “சூர்யகுமார் அபாரமான ஆட்டத்திறனுடன் இருக்கிறார். அவரின் ஆட்டம் தலைசுற்ற வைக்கிறது. அவரை எப்படியாவது விரைவில் ஆட்டமிழக்க வைத்துவிட வேண்டும் அப்போதுதான் அவரின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். அதேபோல விராட் கோலி நம்பர்களுக்காக விளையாடவில்லை அவர் ஒரு இன்னிங்ஸை கட்டமைக்கிறார், அதுதான் அணிக்கு பெரும் பலமாக அமைகிறது. இந்தத் தொடரில் எங்களது முழுத்திறனையும் நாங்கள் வெளிப்படுத்தவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் தெரிந்து வைத்திருக்கிறார். நாங்கள் மிக பலமான இந்திய அணியுடன் மோத இருக்கிறோம்” என கூறியிருக்கிறார்.

image

போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள ரோகித் சர்மா “அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரையும் தயாராக இருக்க சொல்லி இருக்கிறேன். அரையிறுதியிவ் அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப யார் வேண்டுமானாலும் புதிதாக கூட களமிறங்களாம். அரையிறுதிக்கும் இறுதிக்கும் மாற்றம் தேவைப்பட்டால் விக்கெட் கீப்பர்களில் தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட் யார் வேண்டுமானாலும் களமிறக்கப்படலாம். ஆக மொத்தம் நாங்கள் முழு அணியும் தயாராகவே இருக்கிறோம். என் கையில் ஏற்பட்ட காயம் சரியாகிவிட்டது நாளை விளையாடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை” என பேசியுள்ளார்.

இந்திய அணியின் பலம் யார் யார்?

பேட்டிங்கில் இப்போது ஃபார்மில் இருப்பவர்கள் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் கே.எல்.ராகுல். பவுலிங்கை பொறுத்தவரை புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது ஷமி ஆகியோர் சமபலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் மூவருமே சிறப்பாக பந்துவீசக் கூடியவர்கள். சுழற்பந்துவீச்சை பொறுத்தவரை அக்ஸர் படேல் மற்றும் அஷ்வின் ஆகியோர் மிகச் சிறந்த அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும் இங்கிலாந்துக்கு எதிராக இருவரின் ரெக்கார்டுகள் அபாரமாக இருப்பது கூடுதல் பலம்.

image

இங்கிலாந்தின் பலம் யார் யார்?

இங்கிலாந்தை பொறுத்தவரை ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் ஃபார்மில் இருக்கிறார்கள். பந்துவீச்சை பொறுத்தவரை மார்க் வுட், சாம் கரண், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசுகின்றனர். மொயின் அலியும் சிறப்பாக செயல்படுவதால் ஆல் ரவுண்டரிலும் இங்கிலாந்துக்கு பிரச்னை இல்லை. டேவிட் மலான் காயமடைந்து இருப்பது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணியில் டேவிட் மலானுக்கு பதிலாக யாரை களமிறக்குவார்கள் என தெரியவில்லை.

எதிர்பார்க்கப்படும் மோதல்?

ஜோஸ் பட்லர் vs புவனேஷ்வர் குமார் – சூர்யகுமார் யாதவ், கோலி vs மார்க் வுட் ஆகியோர்களுக்கு இடையே பலமான மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோஸ் பட்லருக்கு இதுவரை 32 பந்துகளை வீசியுள்ள புவனேஷ்வர் குமார் 32 ரன்களை விட்டுக்கொடுத்து அவரை 5 முறை அவுட்டாக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.