நடிகை ஹன்சிகா மோத்வானி தனது திருமண அறிவிப்பை வெளியிட்டதும் அதுகுறித்த சர்ச்சையும் பரவ ஆரம்பித்துவிட்டது. ஹன்சிகாவின் காதலர் சோஹைல் ஏற்கெனவே திருமணமானவர் என்றும் அவரது சங்கீத் ஃபங்ஷனில் ஹன்சிகாவே கலந்துகொண்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ், விஜய், சிவகார்த்திகேயன், விஷால், ஜெயம் ரவி, அல்லு அர்ஜுன் எனத் தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நாயகியாக நடித்து ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் ஹன்சிகா. குறிப்பாக, சின்ன குஷ்பு என்று பேசப்பட்டவர்.
சமீபத்தில் அவரது 50வது படமான ‘மகா’ வெளியானது. இதனைத் தொடர்ந்து, நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட தமிழ், தெலுங்குப் படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், வரும் டிசம்பர் 4-ம் தேதி ஜெய்ப்பூர் அரண்மனையில் ஹன்சிகாவுக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது என்று தகவல் வெளியானது. இதனை உறுதி செய்யும் விதமாக தன்னுடன் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நடத்தும் தொழிலதிபர் சோஹைல் கதூரியாவைக் காதலிப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் ஹன்சிகா.
இதனை ஆதாரப்படுத்தும் விதமாக, காதலின் சின்னமாய் விளங்கும் உலக அதிசயங்களுள் ஒன்றான ஈபிள் டவர் முன்பு சோஹைல் தனது காதலைத் தெரிவித்திருந்ததையும் அதனை, ஹன்சிகா மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதையும் புகைப்படங்களாகப் பகிர்ந்திருந்தார். ஹன்சிகா பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என குழந்தைப் பருவத்திலிருந்தே பல மொழிப் படங்களில் நடித்து வருவதால் அனைத்து மொழி ஹீரோக்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில் லைக்ஸையும் கமென்ட்ஸையும் வாழ்த்துகளாகக் குவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில்தான், ஹன்சிகா காதலிக்கும் சோஹைல் ஏற்கெனவே திருமணமானவர் என்றும் கடந்த 2016-ம் ஆண்டு அவருக்கும் ரிங்கு என்ற பெண்ணுக்கும் நடந்த சங்கீத் ஃபங்ஷனில் ஹன்சிகாவே பங்கேற்ற வீடியோவும் வைரலாகியிருக்கிறது. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் வெளிநாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து ஹன்சிகாவுடன் இணைந்து ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்தி வந்தாலும் இருவரும் எட்டு வருடங்களாக நண்பர்கள்.
ஹன்சிகாவின் சகோதரர் பிரஷாந்த் மோத்வானியின் திருமணத்திலும் சோஹைல் பங்கேற்றுள்ளார். அதுபோல்தான், ஹன்சிகாவும் சோஹைல் – ரிங்கு சங்கீத் ஃபங்ஷனில் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளார். அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ள நிலையில், தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் தோண்டியெடுத்து வைரலாக்கி அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அதே சமயம் ஒரு திருமண உறவு முறிவது என்பது இயல்பாக நடக்கும் ஒன்றுதான். அதேபோல, ஒரு திருமண நிகழ்வு என்றால் நெருங்கிய நண்பர்கள் இருக்கத்தானே செய்வார்கள். பிரிந்த கணவனோ மனைவியோ தனக்கானதொரு துணையை மீண்டும் தேடிக்கொள்வதில் தவறு என்ன, அப்படித் தேடிக்கொள்வது நீண்டநாள் நண்பராக இருப்பதிலும் தவறு என்ன என்கிற ரீதியிலும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நியாயம்தானே?!
ஹன்சிகா தரப்பிலிருந்து இன்னும் இதுகுறித்து எந்த விளக்கமும் தரப்படவில்லை.