ஜடேஜாவுக்கும், சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் இடையே விரிசல் இருந்தாலும், 2023 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் ஜடேஜா தொடர்ந்து நீடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
2022 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மகேந்திரசிங் தோனி விலகியதால், ரவீந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனால் பாதி சீசனிலேயே கேப்டன்சியிலிருந்து விலகிய ஜடேஜா, காயம் காரணமாக அந்த சீசனில் முழுமையாக விளையாடாமல் வெளியேறினார். மேலும் இந்த கசப்பான அனுபவத்திற்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சிஎஸ்கே சார்ந்த புகைப்படங்கள், பதிவுகளை நீக்கினார் ஜடேஜா. இதனால் ஜடேஜாவிற்கும் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் இடையே விரிசல் விழுந்துவிட்டதா? அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியில் அவர் இடம்பெறுவாரா? என்ற கேள்விகள் எழுந்தவாறு உள்ளன.
இதனிடையே வரும் டிசம்பர் மாதம் ஐபிஎல் மினி ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ள நிலையில், ஜடேஜாவை சென்னை அணி விடுவிக்கப் போவதாகவும் பல்வேறு யூகங்கள் பரவின. இந்நிலையில் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வெளியிட்ட செய்தியின்படி, ஜடேஜாவுக்கும், சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் இடையே விரிசல் இருந்தாலும், 2023 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் ஜடேஜா தொடர்ந்து நீடிப்பார் என்ற உறுதியான தகவல் கிடைத்துள்ளது. அணியில் 7வது இடத்தை ஜடேஜாவை தவிர வேறு யாராலும் நிரப்ப முடியாது என்பதாலும், ஜடேஜாவின் திறமை மீது கேப்டன் எம்எஸ் தோனி இன்னும் நம்பிக்கை வைத்திருப்பதாலும், வரும் சீசனில் சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா தொடர்ந்து விளையாடுவார் என்று கூறப்படுகிறது. ஜடேஜாவை மஞ்சள் டீசர்ட்டில் இனி பார்க்க முடியாதா என்று ஏங்கித்தவித்த ரசிகர்களுக்கு இந்த தகவல் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரை தவறவிட்ட ஜடேஜா, அடுத்ததாக வங்காளதேசம் சுற்றுப்பயணம் மூலம் அணிக்கு திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.