வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் அதன் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன. இந்த மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பு பகுதிகளாக ‘23 இடங்கள்’ கண்டறியப்பட்டிருக்கின்றன. மழைப் பாதிப்பு ஏற்படும்போது, அந்த 23 இடங்களிலும் வசிக்கும் மக்களை மீட்டு தங்க வைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் தரப்பில் 26 நிவாரண முகாம்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான மீட்புப் பணிகளுக்காக 24 பெண்கள் உட்பட 239 முதல்நிலைப் பொறுப்பாளர்களும் தயாராக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ‘‘வருவாய்த்துறையின் மூலம் வட்ட அளவில் பல்துறை அலுவலர்கள் அடங்கிய 6 குழுக்களும், உள்வட்ட அளவில் 20 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட 11 துறைகளின் அலுவலர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்தக் குழுவினர் மழைக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை அவர்களது துறை தலைமைக்குத் தெரியப்படுத்தி உடனுக்குடன் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.
மழை வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0416-2258016 எண்ணில் தெரியப்படுத்தலாம். பாதிப்புகளை உடனடியாக சரிசெய்யவும், கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘கட்டுப்பாட்டு அறை’ ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் சார்ப்புத் துறை அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வேலூர் வட்டாட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை எண் : 0416-2220519.
காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் : 0416-2297647.
அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகம் : 9445461811.
கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகம் : 9629472352.
குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் : 04171-221177.
பேரணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலக எண் : 04171-292748.
மேலும், மழை வெள்ளம் செல்லும் சாலைகள் மற்றும் பாலங்களில் பொது மக்கள் செல்ல வேண்டாம் எனவும், மழைக் காலங்களில் மின்சாதனப் பொருள்களை பாதுகாப்பான முறையில் உபயோகப்படுத்த வேண்டும் எனவும், தேவையான அளவிற்கு மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டிகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை குளம், குட்டை மற்றும் ஏரி, நீர்த்தேங்கியிருக்கும் பகுதிகளில் விளையாடவோ, செல்ஃபி புகைப்படம் எடுக்கவோ அனுமதிக்கக் கூடாது. அதேபோல, மழை வெள்ளம் தொடர்பாக தனிநபர்கள் தெரிவிக்கும் செய்திகளை பொதுமக்கள் கருத்தில் கொள்ளக்கூடாது. அரசின் மூலம் வெளியிடப்படும் செய்திகளை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் கூறியிருக்கிறார்.