விகடனின் ‘Doubt of common man’ பக்கத்தில் சரவணன் என்ற வாசகர் `மழை நேரத்தில் வீடுகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?’ என்று கேட்டிருந்தார்.
“ நான் ஆசையா கட்டின வீட்ல இப்படி தண்ணி இறங்கிருச்சே”, “ஆபீஸ்ல என் தலைக்கு மேல இருக்கிற சுவத்துல தினமும் தண்ணி சொட்டிட்டே இருக்கும்”, இவையெல்லாம் நாம் மழைக்காலங்களில் தினமும் கடந்து போகும் புலம்பல்கள். எனவே மழை நேரங்களில் கட்டடங்களை பாதுகாக்க முன்கூட்டியே செய்ய வேண்டிய ஆயத்த பணிகள் குறித்து பொறியியல் வல்லுநர் திரு.வெங்கடாசலத்திடம் பேசினோம்.
இத்தொடர்பாக அவரளித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த டிப்ஸ் இதோ:
-
மழைநீர் வடிகால் கிணறுகள் வைக்கப்பட்டுள்ள வீடுகளில், மொட்டை மாடியில் தண்ணீர் ஊற்றினால், மழைநீர் வடிகாலுக்கு தண்ணீர் செல்கிறதா என்பதை ஒருமுறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
-
உங்கள் கட்டடத்தின் மொட்டைமாடியில், மழைநீர் வடிகாலுக்காக, வைக்கப்பட்டுள்ள குழாய்களில் அடைப்பு இருக்கிறதா, என்பதைச் சரிபார்த்துக் கொள்ளவும். ஏனென்றால், அதில் மரங்களிலிருந்து நிறைய காய்ந்த இலைகள் விழுந்து, அடைபட்டிருக்கும் அது நம் கவனத்தில் வராமல் போயிருக்க வாய்ப்புண்டு.
-
உங்கள் வீட்டின் கழிவுநீர் மற்றும் மழைநீர்க் குழாய்களில், அடைப்பு இருக்கின்றனவா என ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும், அப்படி இருக்கும் பட்சத்தில் உடனடியாக தண்ணீர் போவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!
-
கட்டடத்தில் விரிசல்கள் பெரிதாக இருக்கும் பட்சத்தில், பொறியாளரை அணுகி, ஒருமுறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளவும்.
-
மழைநீர் தேங்கும் பகுதியில் உங்கள் வசிப்பிடம் இருந்தால், அருகிலுள்ள மின்சார இணைப்புப் பெட்டிகள் அபாயகரமாக இருக்கும்பட்சத்தில், உடனடியாக அருகிலுள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் தெரிவிக்கவும்.
-
கனமழை பொழியும்போது, எலக்ட்ரிக்கல் பாக்ஸ் வழியாக தண்ணீர் வரும். அப்படி வரும்பொழுது தண்ணீரைத் தடுப்பதற்கு முயற்சிக்காதீர்கள். ஏனென்றால் அதன் மூலமாக மின்சாரம் பாய்வதற்கும் வாய்ப்புண்டு.
-
தொடர்மழை பொழியும்போது, சுவர் ஈரமாக இருந்தால், சுவர்களில் மீது கை வைக்காமல் டெஸ்டர் வைத்து, ஒருமுறை மின்சாரம் அதில் பாய்கிறதா, என்பதைத் தெரிந்துகொண்டு அதன்பிறகு கை வையுங்கள்.
-
மழை வருவதற்கு முன் எலக்ட்ரிக்கல் ஒயரிங் பிரச்சனைகள் இருந்தால் ஒருமுறை எலெக்ட்ரிசின்-ஐ கூப்பிட்டு சரி செய்துகொள்ளவும்.
-
மழை பொழிந்து, தெருக்களில் தண்ணீர் ஓடும்போது கொஞ்சம் தெருக்களையும் கவனியுங்கள். வெளியிலிருக்கும் குப்பைகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால்களில், அடைத்துக் கொண்டு தண்ணீர் செல்லாமல் நின்றுகொண்டிருக்கும். அதற்கு மாநகராட்சியில் தான் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் தெருக்களில் ஒரு குழு அமைத்து நீங்கள் கூட அந்த பணியை செய்யலாம். தெருவில் நிற்கும் தண்ணீரை நீங்களே அகற்றலாம்,
-
மழை நேரத்தில் சீக்கிரமாக வீட்டுக்குள் தண்ணீர் போகும். தாழ்வான பகுதிகளில் முதலில் நீங்கள் அடைக்கவேண்டியது உங்கள் டாய்லெட். தண்ணீர் வெளியே செல்லும் பகுதியை அடைக்க வேண்டும். ஏனென்றால் மழை பெய்தவுடன், தண்ணீர் உள்ளே வரும்பொழுது முதலில் வருவது டாய்லெட் வழியாகத் தான். அதிலுள்ள அழுக்குகள் மொத்தமும் வீட்டினுள் வந்து சேர்ந்துவிடும். அதனால் இரண்டு மணல் மூட்டைகள் போட்டு அந்த துளையை அடைத்துவிட வேண்டும்.
-
மழைநீர் வடிகால் கிணறுகள், கட்டிடங்களுக்கு மட்டுமல்லாமல், விவசாய நிலங்களிலும் 50 சென்ட் நிலத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு மழை நீர் கிணறுகள் (4அடி விட்டம் கொண்ட கிணறு) உருவாக்குவது அவசியம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தண்ணீர் வீணாவது தவிர்க்கப்படும்,