டெல்லியில் காற்று மாசுபாடு சில ஆண்டுகளாகவே கடுமையாக உள்ளது. அது மக்களிடம் தீவிர ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், அங்கு 2023 ஜனவரி 1-ம் தேதி வரை பட்டாசு வெடிக்கத் தடையை அமல்படுத்தியுள்ளது டெல்லி அரசு. பட்டாசு உற்பத்தி செய்ய, விற்பனை செய்ய, விற்க விதிக்கப்பட்டுள்ள தடையை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, டெல்லி மக்கள் பட்டாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். காற்றை அளவுக்கு அதிகமாக மாசுபடுத்தியதால் டெல்லி மக்கள் பண்டிகை கொண்டாட்டத்தை விலையாகக் கொடுக்கும் நிலை ஏற்பட்டிருப்பது, மாநிலங்களுக்கான எச்சரிக்கை மணி.

டெல்லி

இந்நிலையில், காற்று மாசற்ற, 15 வருடங்களுக்கு முந்தைய டெல்லியின் தீபாவளி நினைவலைகள் இங்கே…

அக்டோபரில் குளிர்காலம் தொடங்கும்போதே குதூகலமும் தொடங்கிவிடும். ராம்லீலாவுக்கு மின்விளக்கு தோரணங்கள் அமைத்து குளிர் இரவில் நாடகம் பார்ப்பதிலிருந்தே தீபாவளிக்கான அறிகுறிகள் தொடங்கிவிடும்.

ராஷ்டிரபதி பவன், மத்திய அரசின் அமைச்சகங்களான சாஸ்திரி பவன், உதயோக் பவன், கிரிஷி பவன், ரயில் பவன், ராஜ் பாத், வங்கிகளின் தலைமையகங்கள், ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷன், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், கோயில்கள், குருத்வாரா, பெரும் கட்டடங்கள் என எல்லாம் மின் அலங்கார விளக்குகளால் இரவு நேரத்தில் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்ததுபோல் ஜொலிக்கும். அவற்றையெல்லாம் இதமான பனி இரவில் பார்க்கும்போது மனதுக்குள் மகிழ்ச்சி வெளிச்சம் பரவும்.

கன்னாட் பிளேஸ், சாந்தினி சௌக், கரோல் பாக் அஜ்மல் கான் ரொடு, சரோஜினி நகர் மார்க்கெட், லஜ்பத் நகர் மார்க்கெட்டுகளில் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு உட்பட இந்தியாவின் எல்லா மாநிலங்களின் கலாசார, பாரம்பர்யத்தின் ஆடைகள், கோ-ஆப்டெக்ஸ் மாதிரி அந்தந்த மாநிலங்களின் ஹேண்ட்லூம்ஸ் ஆடைகள், பட்டு வேட்டி, பட்டுச் சேலை, சுடிதார், சல்வார், குர்தா பைஜாமா, சால்வை, சொட்டர், ஜெர்கின், ஜமுக்காளம், ரஜாய் என விதவிதமான ஆடைகள் கண்ணைப் பறிக்கும். விற்பனை அமோகமாக நடக்கும்.

தீபாவளிக்கு பத்து நாள்களுக்கு முன்பே கிஃப்ட் கொடுக்க மொத்த விற்பனை நடக்கும் கஷ்மிரி கேட் பகுதியில் பர்சேஸ் தொடங்கிவிடுவார்கள். அலுவலகங்களில், பணிபுரிபவர் களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும், முக்கியமான வி.ஐ.பி-களுக்கும் விலை உயர்ந்த ட்ரை ஃப்ரூட்ஸ் பாக்ஸ், லட்டு, ரசகுல்லா, குலோப் ஜாமுன் ஸ்வீட்ஸ், வெள்ளி, சில நிறுவனங்கள் கோல்டு காயின்கள் உட்பட பலருக்கும் பரிசளித்து மகிழ்வார்கள்.

கிஃப்ட்

வியாபாரம் செய்யும் பெரும்பாலான நிறுவனத்தின் அலுவலகங்கள் தீபாவளி அன்று திறந்திருக்கும். விடுமுறை கிடையாது. தீபாவளித் திருநாளில் புதுப்பித்து பூஜை செய்து லாபம் என புதிய கணக்கு தொடங்குவார்கள். அடுத்த நாள் தீபாவளி கொண்டாடுவார்கள். பஞ்சாபிகள் வீடுகளில் வரிசையாக விளக்கேற்றுவார்கள்.

கரோல் பாக்கிலிருந்து நடந்தே நார்த் அவென்யூ வந்தபோது பஞ்சாபி பாக் முழுவதுமே கலர் விளக்குகளால் உயரமான வீடுகளின் வீதி, சாலை எங்கும் மின்தோரணங்களைக் கட்டியிருந்தார்கள். நட்சத்திரங்களை வானத்தோடு அப்படியே எடுத்து வந்து தலைக்கு மேல் கட்டி வைத்ததுபோல் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தெரிந்தது. வானத்தில் நடந்து வந்தது மாதிரியான மகிழ்வைக் கொடுத்தது. வாணவேடிக்கை டெல்லியில் அற்புதமாக இருக்கும்.

அத்தனை வெடிகளும் விலை உயர்ந்தவையாக வெடிப்பார்கள். எல்லாம் வானில் சென்று வெடித்து கலர் கலராய், விதவிதமாய், வண்ண வண்ணமாய் குடைபோல் ஒளிர்ந்து காற்றில் மெள்ள மிதந்து வரும். பரவசத்தில் சந்தோஷம் மிதக்கும். வெடிகளின் ஒளிகள் சடுகுடு ஆடும். தௌசன் வாலாக்கள், சங்கு சக்கரங்கள், மத்தாப்புகளின் தீ மழை, தரையிலிருந்து எழும்பும். அது ஒரு கொண்டாட்டக் காலம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஓரிடத்தில் கூடி லேசர் ஒளியில் வெடியில்லாமல் வெடித்தோம்.

இந்நிலையில், கடுமையான காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக டெல்லியில் பட்டாசு வெடிக்கத் தடை சூழலில், மாஸாக வெடிவெடித்துக் கொண்டாடிய மக்கள், மாசு இல்லாமல் இப்போது கொண்டாடுகிறார்கள் தீபாவளியை… விளக்கேற்றி!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.