மின்சாரத்தை இதுவரை நுகர்வு செய்த நிலை மாறி, தற்போது பொதுமக்களே உற்பத்தி செய்யும் நிலை உருவாகியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சொந்த மாநிலமான குஜராத்திற்கு மூன்று நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள மொதேரா கிராமத்தை நாட்டின் முதல் சூரியசக்தி கிராமமாக அறிவித்தார். அத்துடன் மொதேராவில் உள்ள சூரிய கோயிலில் முப்பரிமாண தொழில்நுட்பத்தையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மக்களிடையே உரையாற்றிய பிரதமர், குஜராத்தில் புதிதாக தொடங்கப்பட்ட திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மின்சாரம் இல்லாததால் ஒரு காலத்தில் கல்வி மற்றும் தொழில்களுக்கு பல இடையூறுகள் இருந்ததாகவும், ஆனால், சூரியசக்தி மின்சாரம் மூலம் அவை தற்போது களையப்பட்டுவிட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார். இதுவரை அரசு மின்சாரம் உற்பத்தி செய்து வந்தது. அதை மக்கள் வாங்கி வந்தனர். ஆனால், தற்போது குஜராத்தில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் சூரியசக்தி தகடுகளை வேய்ந்து, சொந்தமாகவே மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காலம் வந்துவிட்டதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.