ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நூறு வயது மூதாட்டி ஒருவர் வீட்டுக்கு வெளியே வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மூதாட்டியின் கால்களில் இருந்த கொலுசுகளைப் பறிக்க முயற்சி செய்திருக்கின்றனர். அதற்காக மூதாட்டியின் கால்களை வெட்டிய அந்தக் கும்பல், மூதாட்டி அணிந்திருந்த கொலுசுகளை ரத்தம் சொட்டச்சொட்ட… திருடிச் சென்றது.
இந்தக் கொடூர தாக்குதலின்போது மூதாட்டியின் கால்கள் வெட்டுப்பட்டதுடன், அவர் முகத்திலும் காயம் ஏற்பட்டது. அதையடுத்து, அந்த மூதாட்டி அக்கம் பக்கத்தினர் மூலம் மீட்கப்பட்டு ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டியின் கால்களை வெட்ட மர்ம நபர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், வெட்டப்பட்ட அவருடைய கால் பாகங்கள் மீட்கப்பட்டிருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், இது குறித்து ஊடகங்களிடம் பேசிய மூதாட்டியின் மகள் கங்காதேவி, “என் அம்மா கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், வீட்டுக்கு வெளியே உள்ள வாய்க்காலுக்கு அருகே இருப்பதாக என்னுடைய மகள் என்னிடம் கூறினாள். இதையடுத்து, என் தாயை மீட்டுச் சென்று மருத்துவமனையில் சேர்த்தோம்’’ என்றார்.
மூதாட்டியை தாக்கி கொலுசுகளைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.