ஹர்ஷா போக்லே சூர்யகுமாரின் ஃபார்மை தக்கவைக்க என்ன செய்ய போகிறீர்கள் என்று கேள்வியெழுப்பியதற்கு, நச்சென்று பதிலளித்து அசத்தினார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டர் சூர்யகுமார் யாதவ் தனது மற்றுமொரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். 22 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் விளாசி அமர்க்களப்படுத்தி இருந்தார் சூர்யகுமார். தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் ஆட்டமிழந்த பிறகு, இந்திய அணி ரன் ரேட்டை அப்படியே வைத்திருக்கக் காரணம் சூர்யகுமார் மற்றும் விராட் கோலி காட்டிய பொறுப்பான ஆட்டம் என்பதை மறுக்கவியலாது.
கோலியும், சூர்யாவும் இணைந்து 102 ரன்கள் என்ற இமாலய பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். இதன் மூலமாகத்தான் மில்லரின் கில்லர் அட்டாக்கையும் தாண்டி இந்திய அணி போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றியது. போட்டிக்கு பிந்தைய விளக்கவுரையின் போது, இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் ஹர்ஷா போக்லே, “சூர்யாவின் ஃபார்மை எப்படி சீராக வைத்திருக்கிறீர்கள்? அவர் இருக்கும் ஃபார்ம் பாதுகாக்க வேண்டிய ஒன்று. எப்படி அதை தக்கவைக்க போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா, “இனி அவர் விளையாட வேண்டாம். 23 ஆம் தேதி வரை அவர் இனி விளையாட தேவையில்லை. தனது விளையாட்டை தனது போக்கில் விளையாட விரும்பும் வீரர் அவர். அதுவே அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. நாங்களும் அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறோம்.” என்று தெரிவித்தார். வரும் 23 ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் விளையாட உள்ளது.