6ஆம் வகுப்பு மாணவர்களை வகுப்பறைக்குள் வைத்து பூட்டி, மரக்குச்சியால் சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார் ஜார்க்கண்ட் ஆசிரியர் ஒருவர். இதில் காயமடைந்த 13 மாணவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விகாஸ் சிரில் என அறியப்படும் அந்த ஆசிரியரின் சொல்லுக்கு ஏற்ப நடனம் ஆட மறுத்துள்ளனர் அந்த மாணவர்கள். அதனால் ஆசிரியர் அவர்களிடம் கோபத்தைக் காட்டவே அதுகுறித்து பள்ளியின் பிரின்ஸ்பலிடம் மாணவர்கள் முறையிட்டுள்ளனர். ஆனால் மாணவர்களுடைய பேச்சை கேட்பதற்கு பதிலாக அவர்களை அடிக்கச்சொல்லி ஆசிரியரிடம் அறிவுறுத்தியிருக்கிறார் பிரின்ஸ்பல். அதன்பேரில் ஆசிரியரும் மாணவர்களை வகுப்பறைக்குள் வைத்து பூட்டி அடித்துள்ளார்.
இதனால் எரிச்சலடைந்த மாணவர்களின் பெற்றோர்கள், வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாங்கள் பலமுறை பொருத்துப்போனதாகவும், ஆனால் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடம் மிருகங்கள் போல் நடந்துகொள்வதாகவும் தெரிவித்தனர். இந்த பள்ளியில் இதற்குமுன்பே இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், பெற்றோர்கள் ஆசிரியர்கள்மீது புகாரளித்திருப்பதாகவும் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போது மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், புகாரின்பேரில் சட்டபடி நடவடிக்கை எடுக்க்ப்படும் எனவும் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.