டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பும்ராவின் பங்களிப்பு மிக முக்கியம் என்கிற நிலையில், அவர் விலகியிருப்பது அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது. குரூப் 1 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி வரும் அக்டோபர் 6ம் தேதியன்று ஆஸ்திரேலியா புறப்படுகிறது. இந்தநிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகி உள்ளார். முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக பும்ராவுக்கு 2 மாத காலம் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனையடுத்து, பும்ரா டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகி உள்ளார். இந்நிலையில், பும்ராவும் விலகுவது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
சமீபகாலமாக இந்திய அணியின் பந்துவீச்சு மோசமாக உள்ளது. ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தோற்றதற்கு பவுலிங் தான் காரணமாக பார்க்கப்பட்டது. இதனால் பும்ரா வந்தால் அனைத்தும் மாறிவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஏனெனில் மிகவும் நேர்த்தியாக பந்து வீசும் பும்ரா, ஓவருக்கு 7 ரன்களுக்கும் குறைவாக விட்டுக் கொடுத்து யார்க்கர் வீசுவதில் கை தேர்ந்தவர். குறிப்பாக டெத் ஓவர்களில் ஒரு ஸ்பெஷலிஸ்ட் போல் சிறப்பாக செயல்படுவார் என நம்பிக்கையுடன் ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில், பும்ரா இல்லாதது டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் வாய்ப்பு மங்கி உள்ளது என்றே கூறலாம்.
பும்ரா விலகியதால் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள் எனத் தெரிகிறது. மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டிருந்த முகம்மது ஷமி மற்றும் தீபக் சஹார் ஆகிய இருவரில் ஒருவர் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. பிசிசிஐ என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம்.
இதையும் படிக்க: இந்தியா-பாகிஸ்தான் இடையே போட்டி நடத்த ’இங்கிலாந்து’ ஆர்வம் – பிசிசிஐ மறுப்பு; ஏன்?