இந்தியாவின் பழைமையான மொழிகளுள் சம்ஸ்கிருதமும் ஒன்று. அதோடு இந்தியாவில் அதிகாரபூர்வ 22 மொழிகளில் சம்ஸ்கிருதமும் இடம்பெற்றிருக்கிறது. இருப்பினும், இன்றைய நாள்களில் சம்ஸ்கிருதம் வெகு குறைவாகவே பேச்சுவழக்கில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஆக்ராவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரும், சமூக ஆர்வலருமான டாக்டர்.தேவாஷிஷ் பட்டாச்சார்யா என்பவர், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சம்ஸ்கிருத மொழி குறித்து மத்திய அமைச்சகத்திடம் விவரம் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் மொழித் துறை பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் பதிலளித்திருக்கிறது. அதிலுள்ள தகவலின்படி, 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகையில் 0.002 சதவிகிதம் பேர் மட்டுமே சம்ஸ்கிருதம் பேசுகின்றனர். அதாவது, 24,821 பேர் மட்டுமே சம்ஸ்கிருதம் பேசுகிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.
இது குறித்து டாக்டர்.தேவாஷிஷ் பட்டாச்சார்யா கூறுகையில், “சம்ஸ்கிருதம், அரசியலமைப்பில் சிறுபான்மை மொழியாகப் பட்டியலிடப்படவில்லை. ஆனால் நாட்டின் 22 அதிகாரபூர்வ மொழிகளில் ஒன்றாக இருக்கிறது. மேலும், 2010-ம் ஆண்டில், சம்ஸ்கிருதத்தை மாநிலத்தின் இரண்டாவது அதிகாரபூர்வ மொழியாகப் பட்டியலிட்ட, இந்தியாவின் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் ஆனது. இருப்பினும் சம்ஸ்கிருதம் வெகு அரிதாகவே பேசப்படுகிறது. சம்ஸ்கிருதம் உட்படப் பல மொழிகளின் கலவையான இந்தி, பல கோடி இந்தியர்களால் பேசப்படுகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.