மும்பை சயான் பகுதியைச் சேர்ந்த இக்பால் ஷேக் (36) என்ற டாக்ஸி டிரைவர் கடந்த 2019-ம் ஆண்டு ரூபாலி (20) என்ற இந்துப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். திருமணத்துக்குப் பிறகு ரூபாலி தன் பெயரை சாரா என்று மாற்றிக்கொண்டார். இக்பால் வீட்டில் சாராவை பர்தா அணியும்படியும், முஸ்லிம் பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கும்படியும் நிர்ப்பந்தம் செய்தனர். ஆனால் சாரா தன்னால் பர்தா அணியமுடியாது என்று கூறினார். இதனால் கணவன் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக தன் மகனுடன் சாரா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்னை குறித்தும், இருவரும் விவாகரத்து செய்து கொள்வது குறித்தும் பேச வருமாறு இக்பால் சாராவை அழைத்தார். இருவரும் இரவு 10 மணிக்கு சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது சாரா தனக்கு விவாகரத்து கொடுக்கும்படி கேட்டதாகத் தெரிகிறது.
ஆனால் இக்பால் சாராவை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். மேலும், குழந்தையை யார் வைத்துக்கொள்வது என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதோடு பர்தா அணிவது குறித்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இதனால் இக்பால் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் சாராவின் கழுத்தை அறுத்தார். அதோடு சாராவின் கையிலும் கத்தியால் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே சாரா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவுசெய்து இக்பாலை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் விலாஸ் ரத்தோட் அளித்தப் பேட்டியில், “சாரா கடந்த சில மாதங்களாக குழந்தையுடன் தனியாக வசித்ததாக சாராவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இக்பால் குடும்பம் பர்தா போடும்படி கட்டாயப்படுத்தியதாக சாராவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.
திருமணமான நாளிலிருந்து பர்தா அணியும்படி சாராவை இக்பால் குடும்பம் கட்டாயப்படுத்கியதாகத் தெரிகிறது.