ராகுல் டிராவிட்டின் ரன்களை பின்னுக்கு தள்ளி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்தியாவின் 2வது வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அரைசதம் அடித்ததை அடுத்து விராட் கோலி இந்த ரெக்கார்டை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது மற்றும் டிசைடர் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரின் அதிரடி பேட்டிங்கால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கடைசி வரை நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் விளாசி 63 ரன்கள் சேர்த்து தனது 33ஆவது அரைசதத்தை அடித்தார். இந்நிலையில் 63 ரன்கள் அடித்ததை அடுத்து அதிக ரன்கள் அடித்த இந்தியர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட்டின் ரன்களை முந்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி.
இந்திய அணிக்காக 504 போட்டிகளில் 24,064 ரன்கள் குவித்த ராகுல் டிராவிட்டை முந்திய விராட் கோலி 471 போட்டிகளில் 24,078 ரன்கள் அடித்து தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். 664 போட்டிகளில் 34,357 ரன்கள் அடித்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார்.
மேலும் டி20 போட்டிகளில் 139 போட்டிகள் விளையாடி 3694 ரன்கள் குவித்து டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த உலகின் முதல் வீரராக இருக்கும் ரோகித் சர்மாவை, 107 போட்டிகளில் 3660 ரன்கள் சேர்த்து நெருங்கியுள்ளார் விராட் கோலி.