கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு நிதியுதவி அளிப்பதில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த ஓராண்டாக இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சி அதள பாதாளத்தில் உள்ள நிலையில், பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கிறது. உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டி வருவதால் இலங்கையில் அனைத்து தரப்பினரும் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். இதனால், சர்வதேச நாடுகளிடமும் உலக வங்கி, பன்னாட்டு நிதியம் உள்ளிட்ட நிதி அமைப்புகளிடமும் உதவி கேட்டு நிற்கிறது இலங்கை அரசு.
அதற்கு இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் இந்தியா 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. ஆனால், இலங்கைக்கு நெருக்கமாக காட்டிக் கொள்ளும் சீனா, இந்திய மதிப்பில் சுமார் 6 ஆயிரத்து 200 கோடி ரூபாய்தான், அதுவும் சந்தைகள் மூலம் கடனாகப் பெற அனுமதித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன்மூலம் இலங்கைக்க்கு அதிக நிதியுதவி வழங்கியதில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது.