ஹிஜாப் முறையாக அணியாததால் கைதான பெண் உயிரிழந்ததை அடுத்து ஈரானில் போராட்டம் வெடித்துள்ளது.
ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் அந்நாட்டு காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கைது செய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஹிஜாப் முறையாக அணியவில்லை என்று கூறி, மஹ்சா அமினி (MAHSA AMINI) என்ற 22 வயது பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது காவல்துறையினரால் சரமாரியாக தாக்கப்பட்டு, கோமா நிலைக்கு சென்ற அந்த இளம்பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனினும், இளம்பெண் காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
இந்நிலையில், இதனை கண்டித்து இஸ்லாமிய பெண்கள், தலைமுடியை வெட்டியும், ஹிஜாப்பை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் போராட்டம் தொடர்பாக ஈரானிய பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான மசிஹ் அலினெஜாட் ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். “7 வயதில் இருந்து தலைமுடியை மறைக்கவில்லை என்றால் பள்ளிக்கு செல்லவோ, வேலை செய்யவோ முடியாது. இந்த பாலின நிறவெறி ஆட்சியால் நாங்கள் சோர்வடைகிறோம்” என்று அவர் குறிப்பிட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
Iranian women show their anger by cutting their hair and burning their hijab to protest against the killing of #Mahsa_Amini by hijab police.
From the age of 7 if we don’t cover our hair we won’t be able to go to school or get a job. We are fed up with this gender apartheid regime pic.twitter.com/nqNSYL8dUb— Masih Alinejad (@AlinejadMasih) September 18, 2022