விராட் கோலி உலகக் கோப்பை அணியில் தங்களின் மூன்றாவது தொடக்க ஆட்டக்காரர் என்றும், சில போட்டிகளில் அவரை ஓப்பனராக களமிறக்குவோம் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு முன்னதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா, வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் மூன்றாவது தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி இருப்பார் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோகித் சர்மா, “டி 20 உலக கோப்பை அணியில் இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களே உள்ளோம். ஓப்பனிங் இறக்குவதற்கு நிறைய ஆப்சன்கள் கிடைப்பது மகிழ்ச்சியானதுதான். குறிப்பாக டி20 உலகக் கோப்பை போன்ற போட்டிகளுக்கு நீங்கள் செல்லும்போது, அந்த நெகிழ்வுத்தன்மை அவசியமானது. விராட் கோலி ஓப்பனிங் இறக்குவது எங்களுக்கு ஒரு ஆப்சன். அவர் தான் எங்கள் அணியின் மூன்றாவது தொடக்க ஆட்டக்காரர்.
Captain @ImRo45 addressing the press conference ahead of #INDvAUS series. pic.twitter.com/0i8tmstoUf
— BCCI (@BCCI) September 18, 2022
அவர் நன்றாக விளையாடியுள்ளார். எனவே அவர் எங்களது திட்டவட்டமான விருப்பம். நான் ராகுல் டிராவிட்டுடன் இது குறித்து பேசினேன். சில போட்டிகளில் விராட்டுடன் ஓபன் செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். கடந்த போட்டியில் அவர் நன்றாக விளையாடியதை நாங்கள் அதைப் பார்த்தோம். அதனால் அவரை உலகக் கோப்பை தொடரில் சில போட்டிகளில் ஓப்பனராக களமிறக்குவோம்.
ஆனால், ஆஸ்திரேலிய டி20 தொடரில் ராகுல்தான் இந்திய அணியின் ஓப்பனராக களமிறங்குவார். இந்தியாவுக்காக அவரது ஆட்டம் எப்போதுமே கவனிக்கப்படாமல் போய்விட்டது. ஓரிரு மோசமான ஆட்டங்கள் அவரது கடந்தகால சாதனைகளை மறைக்க முடியாது. ராகுல் களத்தில் எப்படி விளையாடுவார் என்பதை நாங்கள் அறிவோம். அவர் ஓப்பனிங் இறங்குவது எங்களுக்கு மிகவும் முக்கியமானது” என்று கூறினார்.