சமுதாயத்தில் திருநங்கைகளுக்கு போதிய உரிமைகள் கிடைப்பதில்லை. அவர்களது வாழ்கையில் திருமணம் என்பது நினைத்துப்பார்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. ஒடிசா மாநிலத்தில் உள்ள கலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த பஹிர் என்பவர் திருமணமாகி ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு சங்கீதா என்ற திருநங்கை இவருக்கு அறிமுகமானார். நாளடைவில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. பஹிர் தனது காதலை ரகசியமாகவே வைத்திருந்தார். ஆனால் அவரது காதலை அவரின மனைவி கண்டுபிடித்தார். இது குறித்து தனது கணவருடன் மனைவி பேசினார். அவர்களின் காதலை பஹரின் மனைவி அங்கீகரித்தார். அதோடு நிற்காமல் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் தெரிவித்தார். பஹிர் மனைவிதான் இருவரையும் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். உடனே இருவரும் ஒத்துக்கொண்டனர். இருவருக்கும் திருநங்கைகள் புடைசூழ கோயில் ஒன்றில் திருமணம் நடந்தது.
இத்திருமணத்தை பஹிர் மனைவியே முன்னின்று நடத்தியதோடு, தேவையான ஏற்பாடுகளைச் செய்தார். திருமணத்திற்குப் பிறகு பஹிர் தன் இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்த இருக்கிறார். இதற்கும் பஹிர் மனைவி சம்மதம் தெரிவித்துள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது என்ற சட்டத்தை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். சட்டத்தை பற்றி தங்களுக்கு கவலையில்லை என்று இருவரும் தெரிவித்துள்ளனர். திருநங்கை ஒருவர் ஏற்கெனவே திருமணமாகி குடும்பத்துடன் வாழும் ஒருவரை திருமணம் செய்வது மிகவும் அபூர்வமாகும். இத்திருமணத்தில் கலந்து கொண்ட ஆயிஷா இது குறித்து கூறுகையில், “சட்டம் எங்களுக்கும் அனைத்து உரிமைகளும் கொடுத்திருந்தாலும், சமுதாயம் எங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. தற்போது நடந்திருக்கும் திருமணம் எங்களது சமுதாய உறுப்பினர்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வழிவகுக்கும். எங்களுக்கும் எங்களது பார்ட்னர்களை தேர்ந்தெடுக்க உரிமை இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.
இத்திருமணத்தை முன்னின்று நடத்திய காமினி இது குறித்து கூறுகையில், “இருவரின் விருப்பத்தின் பேரில் மனைவியுடன் ஒப்புதலுடன் இத்திருமணம் நடந்துள்ளதால் இது அபூர்வமான திருமணமாகும். இத்திருமணம் குறித்து மறுபரிசீலனை செய்து கொள்ளும்படி திருநங்கை சமுதாயத்தினர் கேட்டுக்கொண்டனர். இருவரும் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் திருமணம் செய்து வைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.