பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த 7-ம் தேதி மாலை நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களாக நடைப்பயணம் மேற்கொண்டார். இன்று காலை முளகுமூட்டிலிருந்து நடைப்பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, மாலையில் கேரளா எல்லையான தளச்சன்விளை பகுதியில் நடைப்பயணத்தை நிறைவு செய்தார். தளச்சன்விளை பகுதியில் தற்காலிக மேடையில் நின்றபடி மக்களிடம் பேசிய ராகுல் காந்தி, “தமிழ்நாட்டில் பாத யாத்திரை மிகவும் சுகமான அனுபவமான இருந்தது. யாத்திரையின் கொள்கைக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவை தற்போது பல நிறுவனங்களும், சிலரும் இணைந்து சாதி, மதரீதியில் பிரித்து ஒற்றுமை இல்லாமல் உருவாக்க துடிக்கிறார்கள். குறிப்பிட்ட சிலருக்கு நன்மை செய்வதற்காகவும், அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு நன்மை செய்வதற்காகவும் மக்களைப் பிரிக்கிறார்கள். அதற்காக மக்களிடத்தில் மோதலை உருவாக்குகிறார்கள்.
இந்தியாவில் அமைதியின்மையை உருவாக்குவதே ஆட்சியாளர்களின் லட்சியமாக உள்ளது. இத்தகைய சூழலில் மக்கள் ஒற்றுமையாக ஒருமைப்பாடாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். இந்தியா என்பது ஓரிரு முதலாளிகளுக்கு உரிய நாடல்ல. கோடான கோடி மக்களுக்கு உரிமையானது இந்த நாடு. இந்திய மக்கள் கடும் உழைப்புக்கு உரிய ஊதியம் கிடைக்கவில்லை. இதை மாற்றத்தான் இந்தப் பயணம்.
தமிழ்நாட்டு மக்களிடம் எனக்கு தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. எனவே மிகுந்த வருத்தத்தோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். பெரியார் மண்ணை வருத்தத்தோடு பிரிந்து செல்கிறேன். ஆனால் நாராயண குருவின் மண்ணில் கால் பதிக்கிறேன் என்கிற மகிழ்ச்சியில் செல்கிறேன். நாராயண குருவும் பெரியாரும் ஒரே கருத்தைத்தான் வலியுறுத்தியுள்ளார்கள். ஏழை மக்களின் நலனுக்காக வாழ்ந்த பெரியவர்கள் அவர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.
நேற்று இரவு கேரள மாநிலத்தின் செறுவறகோணத்தில் ஓய்வெடுத்த ராகுல் காந்தி, இன்று காலை பாறசாலை பகுதியில் நடைப்பயணத்தை தொடங்கினார். கேரள மாநிலத்தில் 18 நாள்கள் நடைப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி பின்னர் கர்நாடகா மாநிலம் செல்கிறார்.