சுமார் 1000 நாட்களுக்குப் பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தநிலையில், அதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கருத்து தெரிவித்து போஸ்ட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும், ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலில் லீக் போட்டிகளில் வெற்றிபெற்று சாதித்த நிலையில், சூப்பர் 4 சுற்றில் தொடர் தோல்விகளை சந்தித்து, தொடரிலிருந்து வெளியேறியது. எனினும், ஆஃப்கானிதான் அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றி அடைந்தது இந்திய அணி. இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடி வந்தார்.
அதிவேகத்தில் அதிரடியாக ரன்கள் குவித்ததால், ரன் மெஷின் என்று அழைக்கப்பட்ட விராட் கோலி, கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்க தேசத்துக்கு எதிரானப் போட்டியில் தனது 70-வது சதத்தை நிறைவுசெய்தநிலையில், அதன்பிறகு சதம் அடிக்க தடுமாறி வந்தார். அத்துடன் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்று அழைக்கப்பட்ட அவர், நல்ல ரன் ரேட் எடுக்கவும் தவறினார். இதனால், சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தார் விராட் கோலி.
இதற்கிடையில் ஆசியக் கோப்பை தொடருக்கு முன்னதாக தனது மனஅழுத்தம் குறித்து மனம் திறந்து பேசிய அவர், மொத்தம் 5 போட்டிகளில் விளையாடி 276 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு அரைசதம் உள்பட தனது 71-வது சதத்தை ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பதிவு செய்துள்ளார். 61 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் உள்பட 122 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து நெட்டிசன்கள், ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சர்கள் உள்பட பலரும் கிங் இஸ் பேக் என்று கொண்டாடத் துவங்கினர்.
ஆனால் இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கருத்து தெரிவித்துள்ளது. அதில், போர்கொண்ட சிங்கம் என்ற தலைப்பில், ஆக்ரோஷமான விராட் கோலியின் புகைப்படத்தை பகிர்ந்து, “ராஜா திரும்பி வந்துவிட்டார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் அவர் ஒருபோதும் ஃபார்மைவிட்டு வெளியேறவில்லை, இல்லையா?. அவர் போர்களில் மீண்டும் மீண்டும் தலைகுனிந்தார், எனினும் அவர் போர்களையும், அதனால் ஏற்படும் தழும்புகளையும் அச்சமின்றி எதிர்கொண்டார், ஒருமுறை கூட அதிலிருந்து விலகவில்லை. இடைவிடாத முயற்சி மேற்கொள்ளும் போர்வீரனை தடைகள் தடுத்து நிறுத்த முடியாது. விசில் போடு” இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது. இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
The King is back, they’re saying. But he never left, did he? pic.twitter.com/EoU1I8xzP0
— Chennai Super Kings (@ChennaiIPL) September 9, 2022