பிரிட்டன் வரலாற்றில் 70 ஆண்டுகாலம் மகாராணியாக ஆட்சிபுரிந்த எலிசபெத் காலமானார். அவருக்கு வயது 96.
உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி என்ற சாதனை படைத்தவர் பிரிட்டன் மகாராணி எலிசபெத். லண்டனில் 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி பிறந்த இவர், 1952 ஆம் ஆண்டு மன்னர் 6ஆம் ஜார்ஜ் மறைந்த பின் அரச பதவிக்கு வந்தார். இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் தொடங்கி லிஸ் டிரஸ் வரை 15 பிரதமர்களை நியமித்திருக்கிறார்.
விக்டோரியா மகாராணியின் 63 ஆண்டுகால சாதனையை முறியடித்து 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்து வந்த எலிசபெத்திற்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் அவருக்கு அதிகாரப்பூர்வ மருத்துவக் குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில், மகாராணியின் உயிர் அமைதியான முறையில் பிரிந்ததாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்தது. இளவரசர் வில்லியம் உள்பட அனைத்து குடும்ப வம்சத்தினரும் பால்மோரல் அரண்மனையில் குழுமியுள்ளனர்.
A statement from His Majesty The King: pic.twitter.com/AnBiyZCher
— The Royal Family (@RoyalFamily) September 8, 2022
மகாராணி எலிசபெத் காலமானதை அடுத்து, அவரது மூத்த மகன் சார்லஸ் உடனடியாக மன்னராக பதவியேற்றார். மறைந்த எலிசபெத்திற்கு 3 மகன்கள், ஒரு மகள், 8 பேரக்குழந்தைகள், 12 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர்.
பிரிட்டனை நீண்டகாலம் ஆண்ட இரண்டாவது மகாராணி என்ற பெருமைக்குரியவராக திகழ்ந்த எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி, மறைந்த பிறகும் மக்கள் மனதில் மகாராணியாகவே வாழ்கிறார்.