உத்தரப்பிரதேச மாநிலம், எட்டாவா மாவட்டத்தில் உள்ள பர்தானா ரயில் நிலையத்தில் நடைமேடைக்கும் தண்டவாளத்துக்கும் இடையிலான இடைவெளியில் விழுந்து ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இன்று காலை 9:45 மணியளவில் ஃபிளாட்பார்ம் 2-ல் இந்தச் சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில் நிலையத்தைவிட்டு ரயில் வெளியேறும்போது, நபர் ஒருவர் பிளாட்பாரம் எண்-2-ல் அவசரமாக ஓடும் ரயிலில் ஏற முயன்றிருக்கிறார். ஆனால், ரயில் வேகமெடுத்ததால் அந்த நபர் எதிர்பாராத விதமாக நடைமேடைக்கும், தண்டவாளத்துக்கும் இடையில் விழுந்தார்.
அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அதற்குள் ரயில் வேகம் கூடியதால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
தண்டவாளத்தில் விழுந்த அந்த நபர் கீழே குனிந்து, ரயிலில் அடிபடாதபடி அமர்ந்திருந்திருக்கிறார். பின்னர், ரயில் பெட்டிகள் அனைத்தும் கடந்து சென்றதும், தன்னுடைய பையை எடுத்துக்கொண்டு எழுந்து, அனைவருக்கும் சைகை மூலமாக நன்றி தெரிவித்தார். அவரை மீட்ட ரயில்வே போலீஸார், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தனர்.