சண்டிகர் மாநிலம், மொஹாலியில் பல்வந்த் சிங் என்ற 82 வயது முதியவர் தன்னுடைய வளர்ப்பு மகன் சுக்விந்தர் சிங்குடன் வசித்து வந்தார். இந்த நிலையில், பல்வந்த் சிங் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை பல்வந்த் சிங் வீட்டில் நுழைந்தபோது, இறந்த சடலத்துக்கு அருகில் அவர் அமர்ந்திருந்தார். உடனே முதியவரன பல்வந்தர் சிங்கை அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியே அழைத்துவந்த காவல்துறை, சுக்விந்தர் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது.
இது தொடர்பாக அங்கிருந்தவர்கள், “பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட அந்த இளைஞன் அந்த முதியவரின் வளர்ப்பு மகன். அந்த முதியவருக்கு சொந்தக் குழந்தைகள் இல்லை என்பதால் சிறுகுழந்தையிலிருந்தே அந்த இளைஞரை வளர்த்து வந்தார். முதியவர் கடந்த ஒரு மாதமாக உள்ளேயே இருந்தார். அவர் யாரிடமும் அதிகம் பேசவுமில்லை. துர்நாற்றம் வீசியதும் எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை, அதனால் நாங்கள் காவல்துறையை அழைத்து தெரிவித்தோம்” என்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய காவல்துறையினர், “வளர்ப்பு மகனின் சடலத்துடன் கடந்த நான்கு நாள்களாக 82 வயது முதியவர் இருந்திருக்கிறார். வீட்டில் நுழைந்தபோது அவர் எதுவும் பேசவில்லை. அவரால் அதிகம் பேச முடியவில்லை. அவருக்கு என்ன நடந்தது என எதுவும் தெரியாது என்றே தோன்றுகிறது. அவர் உடல்நலமில்லாமல் மயக்க நிலையில் இருந்தார். இறந்தவர் தொடர்பாக விசாரணை நடத்திவருகிறோம்” என்று தெரிவித்தனர்.
இறந்த இளைஞர்மீது பல்வந்தர் சிங் அதிக அன்பு வைத்திருந்ததாகவும், அதனால் மகன் இறந்துவிட்டதை ஏற்றுக்கொள்ளாமல் அவர் அருகிலேயே முதியவர் இருந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. உ.பி