ஆசியக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அட்டகாசமாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு உதவிய ஹர்திக் பாண்டியாவை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், “தோனி போல ஆகிவிட்டார்; விரைவில் அடுத்த கேப்டனாக வருவார்” என்று பாராட்டியுள்ளார்.
ஆசியக்கோப்பை தொடரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமார் இருவரின் அபார பவுலிங்கால் பாகிஸ்தான் அணி 147 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 பெரும் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
மேலும் பேட்டிங்கிலும் 17 பந்துகளை மட்டும் சந்தித்து 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உட்பட 33 ரன்களை விளாசி இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இந்நிலையில் ஹர்திக்கின் இந்த அட்டகாச இன்னிங்ஸ் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
“அவர் கேப்டனாக ஆக வேண்டும்; அவர் கேப்டனாக வருவார் என்று நான் நினைக்கிறேன். அவர் தன்னைப் பற்றிய ஒரு வித்தியாசமான அம்சத்தைக் காட்டியுள்ளார். அவர் ஒரு எம்.எஸ் தோனி மாதிரியான ஒரு வீரராக மாறிவிட்டார். அவர் மிகவும் அமைதியாகவும் இருக்கிறார். நன்றாக பேட்டிங்கும் செய்கிறார். அவர் மிகவும் கடினமாக உழைத்து, அதிரடிக்குத் திரும்பியிருக்கிறார். அவர் இந்தியாவின் கேப்டனாவதை நான் எதிர்பார்க்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போதும், ஐபிஎல் போட்டியின் போதும் அவர் தனது சுபாவத்தை வெளிப்படுத்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. முன்னோக்கி செல்லும் தேசிய அணியின் கேப்டனாக இருப்பதற்கான அனைத்து திறன்களையும் அவர் பெற்றுள்ளார் என்று நான் நினைக்கிறேன்,” என்று ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.