ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்த இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, பந்துவீச்சை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாமும், முகமத் ரிஸ்வானும் களமிறங்கினர். புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியாவின் நேர்த்தியான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அணி, சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது.

image

பாபர் அசாம் , அடுத்து வந்த ஃபக்கர் ஜாமான் தலா 10 ரன்களில் நடையை கட்டினர். நிதானமாக விளையாடி முகமத் ரிஸ்வான் 42 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து, பாண்டியா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்களையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. கே.எல்.ராகுல் ரன் கணக்கை தொடங்காமல் பெவிலியன் திரும்ப, கேப்டன் ரோகித் ஷர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். 100ஆவது போட்டியில் விளையாடிய விராட் கோலி, 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் அளித்தார். சூர்யகுமார் 18 பந்துகளில் ஆட்டமிழக்க, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது.

ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜாவும், ஹர்திக் பாண்டியாவும் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். கடைசி இரண்டு ஓவர்களில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19-ஆவது ஓவரில் இந்திய அணி 14 ரன்கள் எடுத்தது. இறுதி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டபோது,  முதல் பந்தில் ஜடேஜா ஆட்டமிழந்தார். இரண்டாவது பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுக்க, மூன்றாவது பந்தில் ஹர்திக் பாண்டியா ரன் எதுவும் எடுக்கவில்லை. எனினும் எந்த பதற்றமும் அடையாத பாண்டியா, நான் பார்த்துக்கிறேன் என அசால்டாக தலையை ஆட்டினார். அவர் சொன்னதுபோலவே, அடுத்த பந்தை சிக்ஸருக்கு விளாசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். 5 விக்கெட்களை இழந்த இந்திய அணி, 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.

image

3 விக்கெட்களை வீழ்த்தியதுடன், ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்த ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இது குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, ”ரன்களை துரத்தும்போது, ஒவ்வொரு ஓவருக்கும் திட்டமிட்டு எதிர்கொள்ள வேண்டும். ஒரு இடதுகை சுழற்பந்தவீச்சாளர், ஒரு அறிமுக வீரர் பந்துவீசுவார்கள் என்று எனக்கு தெரியும். இதனால் கடைசியில் 7 ரன்கள் தான் தேவைப்பட்டது. 15 ரன்கள் தேவைப்பட்டு இருந்தாலும் நான் அடித்திருப்பேன். காரணம், கடைசி ஓவரில் எப்போதும் பேட்ஸ்மேனை விட பந்துவீச்சாளர்களுக்கு தான் நெருக்கடி அதிகம். சிம்பிளாக போட்டியை அணுகினேன்” என்று கூறினார்.

இதையும் படிக்க: கொரோனா சோதனையில் நெகடிவ்’ – மீண்டும் அணியில் இணைந்தார் ராகுல் டிராவிட்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.