ராகுல் டிராவிட்டுக்கு மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்திய அணியினருடன் இணைந்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதற்காக இந்திய அணியினர் அனைவரும் துபாய்க்கு சென்று பயிற்சி எடுத்து வருகிறார்கள். முன்னதாக, இந்தியாவிலிருந்து புறப்படும்முன் வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகளுக்கு வழக்கமான கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் இந்திய அணியினருடன் செல்லவில்லை. இதையடுத்து ஆசிய கோப்பை தொடருக்கான இடைக்கால தலைமை பயிற்சியாளராக, தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கக்கூடிய விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டார்.
இதனிடையே ராகுல் டிராவிட் பிசிசிஐ-யின் மருத்துக்குழு கண்காணிப்பில் இருந்தார். ராகுல் டிராவிட்டுக்கு லேசான அறிகுறிகளே உள்ளன என்றும் மீண்டும் நடத்தப்படும் சோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் இந்திய அணியினருடன் அவர் இணைவார் எனவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள ராகுல் டிராவிட் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அணியினருடன் இணைந்துள்ளார். ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இன்று பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் டிராவிட்டின் வருகை அணிக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.
இதையும் படிக்க: ஆசிய கோப்பை ‘ஹை வோல்டேஜ்’ போட்டி: இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!