`அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசு தரப்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி ஒரு முடிவு எடுக்கலாமே?’ என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசியல் கட்சிகள் தேர்தல் இலவசங்களை அறிவிக்க தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் இலவசம் தொடர்பான விவகாரங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஆணையத்தையோ, குழுவையோ உச்சநீதிமன்றமே அமைக்கலாம் என்றும் அவ்வாறு அமைப்பதாக இருந்தால் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி லோதா போன்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு மத்திய அரசு தரப்பில், `நல்ல யோசனைதான். ஆனால் குழுவிற்கு தலைமை அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட அமைப்பின் கீழ் இருந்தால் சிறப்பாக இருக்கும்’ எனக் கூறியது.

image

அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, “ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த நாட்டில் எந்த மதிப்பும் இல்லை” என அதிருப்தியை கூறினார். மேலும் பேசுகையில், “இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் தேர்தல் இலவசம் தொடர்பாக பேசுகின்றோமே தவிர, தேர்தலுக்கு பின்னர் அறிவிக்கப்படும் இலவச விவகாரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக கருத்தில் கொள்ளவில்லை. ஆனால் இந்த இரு விவகாரத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய மூத்த வழக்கறிஞர் சிங்வி, தேர்தலுக்கு முன்னர் அறிவிக்கப்படும் இலவசம் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவதில் எந்த குழப்பமும் வராது. ஆனால் தேர்தலுக்கு பின்னர் அரசு அமைந்த பின்னர் அறிவிக்கப்படும் இலவசம், திட்டங்கள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது என்பது சிக்கலான விவகாரம் ஆகும். அபாயகரமானதும் கூட” எனக் கூறினார்.

image

இதனைத்தொடர்ந்து பேசிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த தேர்தல் இலவசம் விவகாரத்தில் ஆய்வு செய்ய ஆணையம் அல்லது குழு அமைப்பதையும், அமைக்கப்பட்டாலும் அதனை அரசியல் கட்சிகள் எதிர்ப்பார்கள். எனவே இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்படுவதற்கு முன்னர் ஒரு நீண்ட ஆழமான விவாதம் தேவை” என வலியுறுத்தினார்.

அதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரமணா, இலவசங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக குழு அமைப்பதற்கு ஏற்கனவே மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எனவே, இந்த இலவசங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வு செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு ஒரு குழு அமைக்கலாமே…? அல்லது மத்திய அரசு தரப்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி ஒரு முடிவு எட்டலாமே?” எனக் கேள்வி எழுப்பியதோடு, `இந்த ஆடம்பர இலவச அறிவிப்புகள் விவகாரம் என்பது ஒரு தீவிர பிரச்சனை. எனவே இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு வர வேண்டும் என்பதே என் விருப்பம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஒரு ஆலோசனை நடத்தி முடிவெடுக்கலாமே?’ என மீண்டும் கேள்வி எழுப்பினார்.

image

`இதுபோன்ற இலவசம் அறிவிப்புகள் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்பதால் இது ஒரு தீவிரமான விவகாரம் ஆகும். ஏனெனில், இன்று எதிர்க்கட்சியாக இருப்பவர் நாளை ஆட்சிக்கு வரலாம். அவ்வாறு வருபவர்கள் பொருளாதார சுமைகளை நிர்வகிக்க வேண்டிவரும். பொருளாதாரத்தை அழிக்கக்கூடிய இலவசங்கள் போன்றவை கவனிக்கப்பட வேண்டும்” என தனது கருத்தை கூறினார்.

அதற்கு பதிலளித்து பேசிய, மத்திய அரசின் செலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இலவச அறிவிப்புகள் கடும் விளைவை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக இலவச மின்சாரம் என்ற அறிவிப்பால் பல மின் பகிர்மான கழங்கள் இழப்பை சந்திக்கின்றன. இது ஒரு உதாரணம் மட்டுமே. மேலும், இலவச அறிவிப்பு விவகாரத்தில் சில அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை அடிப்படை உரிமை என கோருகிறது. மேலும் சில அரசியல் கட்சிகள் இலவசம் என்ற ஒரு அறிவிப்பை வைத்தே ஆட்சியை பிடிக்க முற்படுகின்றனர். அதேவேளையில் தேர்தல் இலவச அறிவிப்பு கட்டுப்பாடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அனைத்து விதத்திலும் உதவி செய்யும்” என உறுதி கூறினார்.

image

அனைத்து தரப்பு கருத்தையும் கேட்ட தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தை விரிவாக விசாரித்து, முடிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே இந்த வழக்கை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் பட்டியலிட உத்தரவிடுகிறேன்” என தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.