வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழிக்கு ஏற்ப, கையில் இருந்து வெறும் துண்டை மட்டுமே வைத்து கத்தியுடன் வந்த திருடனை விரட்டிய பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நெதர்லாந்து நாட்டில் டெவேன்ட்டர் நகரில் மெவ்லானா என்ற பெயரில் துருக்கி பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியை லடீஃப் பெக்கர் (47) என்ற பெண் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல தனது பேக்கரியை திறந்த பெக்கர், அங்கிருந்த பொருட்களை துணியால் துடைத்து சுத்தம் செய்துக் கொண்டிருந்தார்.
அப்போது முகமூடி அணிந்திருந்த திருடன் ஒருவன், கையில் கத்தியுடன் பேக்கரிக்குள் ஓடி வந்தான். திடீரென ஒருவர் வேகமாக ஓடி வந்ததால் லடீஃப் பெக்கர் சற்று பின்வாங்கினார். இதனைக் கண்ட திருடன், அசால்ட்டாக கல்லா பெட்டியில் இருந்த பணத்தை எடுக்க முயன்றான். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் கையில் இருந்த துண்டை சுருட்டி அந்த திருடனை சரமாரியாக தாக்க தொடங்கினார் லடீஃப் பெக்கர். மின்னல் வேகத்தில் நடந்த இந்த தாக்குதலை சிறிதும் எதிர்பாராத திருடன், கத்தியை தவறவிட்டான்.
அந்த சமயத்தில் தன்னிடம் இருந்த துணியை திருடனின் கழுத்தில் போட்டு லடீஃப் பெக்கர் இறுக்கினார். இதனால் உயிர் பிழைத்தால் போதும் என திருடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். பேக்கரில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த இந்த வீடியோ,தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கத்தியுடன் திருடன் வந்த போதிலும், சிறிதும் பயப்படாமல் தன்னிடம் இருக்கும் வெறும் துண்டை மட்டுமே கொண்டு அவனை அடித்து விரட்டிய லடீஃப் பெக்கருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.