மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் கட்டமைப்பு மறுசீரமைப்பு செயல்முறையின் ஒருபகுதியாக அந்நிறுவனத்தின் பல்வேறு பிராந்தியங்களில் பணியாற்றி வந்த 1,800 பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து புதியதாக பணியாளர்களை பணியமர்த்துவோம் என்றும் நடப்பு நிதியாண்டில் அதிகமாக பணியாளர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருப்பார்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
“இன்று எங்கள் நிறுவனத்தில் சிறிய எண்ணிக்கையிலான பணிநீக்கங்கள் நடைபெற்றன. எல்லா நிறுவனங்களையும் போலவே, நாங்கள் எங்கள் வணிக முன்னுரிமைகளை வழக்கமான அடிப்படையில் மதிப்பீடு செய்து, அதற்கேற்ப சில கட்டமைப்பு மாற்றங்களைச் செய்கிறோம். நடைபெற்ற மொத்த பணிநீக்கங்கள் 1.8 லட்சம் கொண்ட மைக்ரோசாப்டின் மொத்த பணியாளர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன.” என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சமீபத்தில் கூகுள் நிறுவனமும் 2022 ஆம் ஆண்டு புதிய பணியமர்த்தும் செயலை குறைக்கப்போவதாக அறிவித்தது. அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை மிகவும் முக்கியமான வேலைவாய்ப்புகளை கூகுள் தொடர்ந்து ஆதரிக்கும் என்று தெரிவித்தார். மற்றொரு தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா நிறுவனமும் அதன் வருவாய் இலக்குகளை அடையத் தவறியதால் புதிய பணியமர்த்தும் செயலை குறைக்கப்போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.